tag Guru Paarvaigal: மே 2011

சனி, 21 மே, 2011

58th National film awards

        மே 19, 2011 அன்று 58 வது இந்திய தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது . இது வரை இல்லாத அளவுக்கு மொத்தம் 14 விருதுகளை தமிழ் திரையுலகம் பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதை "ஆடுகளம்" திரைபடத்தில் நடித்த தனுஷ் வென்றார். அதே படத்தை இயக்கிய வெற்றிமாறன் சிறந்த ஒரிஜினல் திரைக்கதை எழுத்தாளர் விருதை வென்றுள்ளார் (அது என்ன ஒரிஜினல்? னு தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்). சிறந்த நடிகைக்கான விருதை சரண்யா பொன்வண்ணனும், சிறந்த துணை நடிகருக்கான விருதை தம்பி ராமையா அவர்களும் பெற்றுள்ளனர். இப்படியே நீண்டு செல்லும் பட்டியலில் சிறந்த பாடலாசிரியர் விருதை வென்றுள்ள வைரமுத்துவும் இடம் பெற்றுள்ளார்.
                           
         சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உடல் நிலை பற்றி மருத்துவ மனை வாசலில் இருந்து தனுஷ் பேட்டி அளிக்கும் போதும் அவர் தேசிய விருது பெற்றது குறித்து கேள்விகள் கேட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. குறிப்பாக அவர் அப்படத்தை வாங்கி வெளியிட்ட நிறுவனத்தை பற்றி நன்றியோடு குறிப்பிட்டது ஒரு நாள் முழுவதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. சரண்யா பொன்வன்னனிடமும் பேட்டி காணப் பட்டு அடுத்த நாள் நாளிதழ்களில் வெளியிடப்பட்டது. "ஆடுகளம்" இயக்குனர் வெற்றிமாறனும் தனுஷுக்கு அடுத்து தொலைக்காட்சியில் முகம் காட்ட பட்டார். விருதுகளை வென்ற மற்றவர்கள் பலரும் காணாமல் போனவர்கள் பட்டியலில் தான் சேர்க்கபட்டார்கள்.(பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் வடிவேலு வா? என்று கேட்காதீர்கள்)

       தேசிய விருது வாங்கியும் கண்டு கொள்ள படாதவர்கள் பட்டியலில் கவிப்பேரரசு வைரமுத்துவையும் சேர்த்து விட்டார்கள். வைரமுத்து தேசிய விருது பெறுவது இது ஆறாவது முறை. ஒவ்வொரு முறை சதம் அடிக்கும் போதும் மற்றவர்கள் அதிக ரன் எடுத்து man of the match விருதை பெறுவதால், நம்மால் கிட்ட தட்ட மறக்க பட்ட டிராவிட் போல ஆறு முறை தேசிய விருது பெற்றும் வைரமுத்துவுக்கு உரிய மரியாதையை கொடுக்காமல் நடிக,நடிகையர்களுக்கும், இயக்குனர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

      வைரமுத்துவின் ஆற்றல் பற்றி நான் எழுத்தை தெரிய வேண்டியது இல்லை.    வைரமுத்து எந்த தேதியில் பிறந்தார் என்பது முதல் அவரது வாழ்க்கை குறித்த விவரங்கள் விக்கிபீடியா விலேயே உள்ளன.  அவர் பெற்ற தேசிய விருதுகளை பற்றிய விவரங்கள் வைரமுத்து.நெட் என்னும் இணைய தளத்தில் உள்ளது. அவரை பற்றி எல்லாமே இணைய தளத்தில் இருந்தும் எழுத பட வேண்டிய சில வார்த்தைகள் உள்ளதாய் படுகிறது.
 
           அவருடைய பத்து புத்தங்கள் படிப்பது ஒரு நூலகத்தில் நூறு ஆண்டுகள் கூடு கட்டி படிப்பதற்கு சமம். அவருடைய "காதலித்து பார்" என்னும் கவிதை காதல் செய்ய ஆரம்பிக்கும் அரும்பு மீசை காரர்களின் தேசிய கீதம். காதலி கிடைத்தும் கவிதை எழுத முடியாதவர்கள் வைரமுத்துவின் ஒன்றிரண்டு கவிதைகளை படித்ததும் சுயமாக எழுதுவார்கள். இல்லா விட்டாலும் சில கற்பனைகளை காலம் உள்ள வரை உபயோக்கிக்கலாம். (ஐம்பது கிலோ தாஜ்மஹால்).

             வைரமுத்து அவர்களுடைய "தண்ணீர் தேசம்" என்னும் நாவல் சிறப்பான பெயர் பெற்றது. அந்த நாவல் கிட்ட தட்ட ஒரு தமிழ் மசாலா திரைப்படம் போலவே இருக்கும். கதாநாயகனுக்கு பெற்றோர் பற்றிய விவரம் இருக்காது. (அவர்கள் இருந்தால் நாயகனுக்கு ஹீரோயசம் செய்ய வாய்ப்பு இருக்காது.) நிறைய படித்து அறிவுஜீவியாய் இருப்பார், ஆனால் நல்ல வேலைக்கு போகாமல் ஏதோ ஒரு வேலையில் இருப்பார். கதாநாயகி மிகுந்த அழகுடைய, வசதி படைத்தவருக்கு ஒரே மகளாய் இருப்பாள். எந்த ஒரு காரணமும் இல்லாமல் நாயகனை காதலிப்பது மட்டுமே கடமையாய் இருப்பாள். நாயகியின் தந்தை பண பலம் மிக்க ஒரு அரசியல்வாதி. இப்படி நாம் பார்த்து பழகிய கதாபாத்திரங்களை வைத்து, சாதாரணமாக சொல்ல பட வேண்டிய கதையில் அறிவியல் தமிழ் என்னும் நான்காவது தமிழை பயன்படுத்தி,  அந்த நாவலை பலரும் பாராட்டும் படி எழுதி உள்ளார்.

           தேசிய விருது பெற்ற தமிழகத்தை சார்ந்த மற்றவர்கள், தமிழை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தி உள்ளார்கள். வைரமுத்து மட்டுமே தமிழில் தன் திறமையை நிருபித்து ஆறாவது முறையாக விருது பெற்றுள்ளார். விருது பெற்ற மற்றவர்களை புறக்கணிக்க கூற வில்லை, வைரமுத்துவிற்கு முதல் மரியாதை கொடுப்பது முறை என்று கருதுகிறேன்!      

             இன்னும் பல விருதுகள் பெற்று தமிழை வளர்க்க வாழ்த்துக்கள், வைரமுத்து!                

சனி, 14 மே, 2011

தேர்தல் முடிவுகள்!

          ஏப்ரல் 13, 2011 ம் தேதி தமிழக மக்கள் வாக்கு அளித்து விட்டு காத்து இருந்த தவத்திற்கு மே 13,2011 அன்று வரமாக ஓட்டு எண்ணிக்கை நடை பெற்றது. 1991 இல் இருந்து இருபது வருடங்களாக தமிழக மக்கள் பின்பற்றி வரும் "எதிர் கட்சியை ஆளும் கட்சி ஆக்கும்" கொள்கை இந்த தேர்தலிலும் பின்பற்ற பட்டது.

              "வடை போச்சே" என்ற கவலையில் முந்தா நாள் ஆளுங்கட்சியினரும், கிடைத்த வடையை என்ன செய்யலாம் என்ற ஆவலில் இன்றைய ஆளுங்கட்சியினரும், இந்த தேர்தல் முடிவுகள் பற்றிய ஆராய்சியில் டிவியில் கோட் போட்ட வர்ணனையாளர்களும் இருப்பார்கள்.

      இன்றைய ஆளுங்கட்சியினரின் வெற்றிக்கு காரணம் "எதிர் கட்சியை ஆளும் கட்சி ஆக்கும்" மக்களின் மனோபாவம்,அதிரடி பிரச்சாரம் (விஜயகாந்த்?) போன்ற காரணங்களையும், நேற்றைய ஆளுங்கட்சியினரின் தோல்விக்கு காரணமாக அலைவரிசை ஊழல், குடும்ப ஆதிக்கம் போன்ற காரணங்களும், இன்னும் பிற விசயங்களும் கூட விவாதிக்க படலாம். 

             இருக்கட்டும், அவர்களுக்கு அது தான் தற்போதைய கடமை. நாம் நமது கடமைக்கு திரும்பலாம். இந்தியா சுதந்திரம் அடைந்த உடன் ஒரு விவசாயி கேட்டாராம் " நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் நான் கஷ்ட பட்டு விவசாயம் செய்ய தான் வேண்டுமா?" என்று. நாம் ஓட்டு போட்ட கட்சி ஆட்சியை பிடித்து விட்டது என்பதற்காக அந்த விவசாயியை போல கேட்க கூடாது, ஒரு வேலை தோற்ற கட்சிக்கு ஓட்டு போட்டு விட்டோமே என்று கவலை படவும் கூடாது. கடமையை செய்தாயிற்று, பலனாக மிக்ஸியோ, கிரைண்டரோ, ஆட்டுக் குட்டியோ, கிடைப்பதை வைத்து திருப்தி பட வேண்டும்.

         தேர்தல் முடிவுகள் அறிவிக்க பட்டு கொண்டு இருந்த பொழுது, பாபநாசம், தென்காசி, சேத்தூர் என தென் பகுதிகள் வழியாக பயணத்தில் இருந்தேன். எந்த விதமான கலவரங்களும் கண்ணில் பட வில்லை. ஒரு கொலை, குறைந்த பட்ச அரிவாள் வெட்டு, கல் வீச்சு, கடை அடைப்பு என எதுவுமே இல்லை. தமிழ்நாட்டில் ரௌடிகளின் வாடகை ஏறி விட்டதா என்று தெரியவில்லை. இல்லை, சீசனுக்கு வெயில் அடிக்கும், மழை வரும் என்பது போல இந்த தேர்தலில் இவர்கள் என்றால் அடுத்த தேர்தலில் அவர்கள் என்று அனைவருமே சமாதானத்துக்கு வந்துவிட்டார்கள் போல. தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதில் சந்தோசமே.

         கடைசியாக, தனது கட்சியோ, தலைவரோ, தோல்வி அடைந்த சோகத்தில் தீக்குளிக்க எண்ணி உள்ளவர்களை, யாரும் தடுக்காதீர்கள். சுய புத்தி இல்லாதவர்கள் தீக்குளிப்பதால் பூமிக்கு பாரம் குறையும், மற்ற படி அவர்களின் குடும்பம் தவிர நாட்டுக்கு இழப்பு ஏதும் இல்லை.

         
   
    
         

               
 

 


செவ்வாய், 10 மே, 2011

குரு பெயர்ச்சி 
           நிகழும் 2011 ம் வருடம், மே மாதம் 05 ம் தேதி நவ கிரகங்களில் ஒருவரான குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சுத்த வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, 08-05-2011 அன்று பெயர்ச்சி ஆகிறார்.

           குரு பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய மற்றும் சுமாரான பலன் பெறுவோர் கீழ் கண்ட சுலோகம் மற்றும் பாடல்களை தினமும் மாலையில் விளக்கேற்றி சொல்லி வர சிரமம் குறைந்து நன்மை பெறலாம்.
                                     --------------------------------------------------------
       குரு பெயர்ச்சி னு டைட்டில் பார்த்துட்டு ராசி பலன் எதிர் பார்த்து சுலோகம் தேடும் அன்பர்கள் கோபிச்சிக்காதீங்க! நான் சொல்ல வந்த குரு பெயர்ச்சியானது, இந்த நிர்மல் குரு  11 ம் தேதி காஞ்சிபுரம் ல இருந்து பெயர்ச்சி ஆகி ராஜபாளையம் போறத பத்தி. 
 
      பொதுவாவே, சென்னை ல இருந்து தென் பகுதிக்கு போகறதுக்கு கூட்டம் எப்பவுமே ஜாஸ்தியா தான் இருக்கும். இதுல, கோடை விடுமுறை னு பள்ளிக்கூடம் எல்லாம் லீவ் விட, குழந்தைகள் சேட்டை தாங்க முடியாம அவங்கள கொண்டு போய் தாத்தா, பாட்டி கிட்ட விடரவங்க கூட்டம் வேற. இந்த போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ரயில்வேசும் போக்குவரத்து துறையும் என்ன என்ன ஸ்டெப்ஸ் எடுத்து இருக்காங்கனு ஒரு ரிப்போர்ட் பார்த்தேன்!
 
          கோடை விடைமுறையை முன்னிட்டு, தென்னக ரயில்வே சென்னையில் இருந்து நாகர்கோயில் க்கு 21 புதிய ரயில்கள் விட பட்டுள்ளது. இது தவிர, ஏற்கனவே இயக்க படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு, மொத்தமாக 6.35 லட்சம் பயணிகளை ஏற்றி செல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மேலும், ரயில்வே நிலையங்களில் கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்கப் பட்டுள்ளது.

     மாநில போக்குவரத்து துறை, கோடை விடைமுறையை முன்னிட்டு, மதுரைக்கு 14 சிறப்பு பேருந்துகளும், கும்பகோணத்திற்கு 8 சிறப்பு பேருந்துகளும், திருச்சி, ஹோசூர், பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு தலா 5 சிறப்பு பேருந்துகளும் இயக்க படுகின்றன.

          பிறகென்ன, ஜாலி ஆக போக வேண்டியது தானே னு நினைக்கிறீங்களா? இந்த ஸ்பெஷல் ரயில் பஸ் எல்லாமே யானை பசிக்கு சோளப்பொறி போல தான்!
    
    ஒரு நாளைக்கு 500 ஓம்னி பஸ் சென்னைல இருந்து தென் பகுதிகளுக்கு போகுது. சென்னை ஒன்னும் மெக்க மதினாவோ, திருப்பதியோ, வேலன்கன்னியோ இல்ல, கால் வச்சா சொர்க்கம் னு சொல்லிட்டு புண்ணியம் தேடி இங்க வர்றதுக்கு. மக்கள் இங்க வந்து குவியறதுக்கு காரணம் வெறும் வேலை வாய்ப்புகள் மட்டும் தான்.
 
        தமிழ்நாடு தலைமை செயலகம் இங்க இருக்கறதால தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அதிகாரிகள் அடிக்கடி இங்க வர வேண்டி இருக்கு. சாப்ட்வேர் கோர்ஸ் படிக்கிறவர்களுக்கு இங்க தான் வேலை , சினிமா சான்ஸ் தேடி வர்றவங்க இங்க தான் வந்து ஆகணும். அழைப்பு நடுவுல, அதாங்க, கால் சென்டர் ஜாப் இங்க மட்டும் தான் கிடைக்கும். கார் பாக்டரி கம்பனிகள் இங்க தான் இருக்கு.பேஷன் டெக்னாலஜி, கேட்டரிங் டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி, நானோ டெக்னாலஜி எல்லா டெக்னாலஜி உம் படிச்சுட்டு வேலை பார்க்க னு இங்க தான் வந்து ஆகணும்.

       மனச ஊர்ல விட்டுட்டு, வயித்துக்காக இந்த ஊர்ல அகதியா திரியறோம். திருவிழா, லீவ் னா, உடனே ஊர்க்கு போகணும்னு நினைப்போம். பஸ் ஸ்டாண்ட் கு வந்து பாத்தா மேல போட்டோல பார்த்த மாதிரி கூட்டம்.

      சிவபெருமான் கல்யாணத்த பாக்க உலகமே வடக்கு பக்கம் வந்தது, அதனால வடக்கு தாழ்ந்து தெற்கு உயரமா  போச்சுன்னு ஒரு கத சொல்வாங்க, அந்த மாதிரி சென்னைய கடலுக்குள்ள அமுக்கிட்டு கன்னியாகுமரி ய உயரம் ஆக்காதீங்க. இப்போ லெவல் பண்ண அகத்தியர் வருவாரான்னு தெரியல.

     இவ்வளவு ஜன நெரிசலை குறைக்க தலை நகரத்த சென்னை ல இருந்து திருச்சிக்கோ மதுரைக்கோ மாத்தலாம், இல்லாட்டி சென்னை ல ஒன்னு, மதுரை ல ஒன்னு னு மொத்தம் ரெண்டு தலை நகர் வச்சுக்கங்க.(இந்த வார்த்தைல சத்தியமா அரசியல் இல்லேங்க). இல்லேன்னா இலவச டிவி,மிக்சி, கிரைண்டர் மாதிரி இலவச ஹெலிகாப்ட்டர் குடுத்தாங்கன்னா நல்ல இருக்கும்.

      இதெல்லாம் நடக்கற கதையா? வேற கேளுப்பானு சொல்றீங்களா? குரு பெயர்ச்சிக்கு ஒரு டிக்கெட் வேணும், கிடைக்குமா?
                 

திங்கள், 9 மே, 2011

+2 result season

         பொங்கல் சீசன் தீபாவளி சீசன் மாதிரி இப்போ தமிழ்நாட்டுல +2 ரிசல்ட் சீசன். நேத்து ரிசல்ட் வெளி வந்தது. நம்ம வீட்ல யாரும் +2  படிக்கலைனா கூட ஒன்னு விட்ட சித்தப்பா பெரியப்பா பசங்களுக்கு  மார்க் பார்த்து சொல்லி இருப்போம். நேத்து முழுவதுமே எல்லா ஆபீசெளும் யார் யார் பசங்க எவ்வளவு மார்க் னு தான் discussion இருந்து இருக்கும்.(இல்லாட்டி மட்டும் வேலை பார்ப்போமா னு கேட்க கூடாது ). 
          நேத்து ஒசாமாவோ இல்ல ஒபாமாவோ செத்து இருந்தா கூட இன்னைக்கு அவங்களுக்கு நியூஸ் ல இடம் இருந்து இருக்காது. எல்லா பேப்பர்லயும் முதல் பக்கத்துல முதல் மார்க் வாங்கின பொண்ணுக்கு (பசங்க முதல் மார்க் வாங்கறது நூற்றாண்டுகளுக்கு ஒரு தடவ நடக்கும்) அவங்க பாமிலி கேக் ஊட்டற மாதிரி போட்டோ போட்டு, அவங்க வெற்றியின் ரகசியம் என்ன னு மூணு பக்கத்துக்கு எழுதி இருப்பாங்க. கேபிள் டிவி கட் பண்ணி அவங்க அம்மா மெகா சீரியல் அ தியாகம் பண்ணின கதை எல்லாம் இருக்கும்.
      இன்னைக்கு னு பேப்பர் ல கண்டிப்பா எக்ஸ்ட்ரா நாலு பக்கம் இருக்கும். அதுல நேத்து கூரை போட்ட காலேஜ் ல இருந்து அண்ணா யுனிவெர்சிட்டி வரைக்கும் விளம்பரம் குடுத்து இருப்பாங்க. தமிழ்நாட்டுல எத்தன இன்ஜினியரிங் காலேஜ் இருக்குனு இன்னைக்கு பேப்பர் ல கவுன்ட் பண்ணினா தெரிஞ்சுக்கலாம். கல்வி தந்தைகள் னு நிறைய பேரு லோக்கல் டிவி ல பேட்டி குடுப்பாங்க.
     எக்ஸாம் ல பாஸ் பண்ணி, சென்டம் லாம் போட்ட மாணவ, மாணவிகளுக்கு மெதுவா பாராட்டு விழா நடத்தலாம். ஏன்ன, இந்த சீசன் ல, ஒரு சோகமான கிளைமாக்ஸ் ஆ,ஒரு வாரத்துக்குள்ள நியூஸ் ல ஒரு ஓரமா தேர்வு தோல்வி காரணமாக ஒருவர் தற்கொலை னும் வரும். முதல்ல அவங்கள கவனிக்கலாம். 
    suppose ரிசல்ட் ல பெயில் னு வந்தா தயவு செஞ்சு ஒரு நாள் வெயிட் பண்ணுங்க, ஏன்ன இன்னைக்கு சாயன்காலமோ நாளைக்கு காலைலையோ changes வரலாம். அப்டி changes வரலேனா நாளைல இருந்து அடுத்த திங்கள் கிழமை குள்ள அந்த அந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆபீஸ் ல revaluation கு 200 ரூபாய்க்கு டிமான்ட் டிராப்ட் குடுத்து அப்ளிகாசன் போர்ம் குடுங்க, ஒரு வாரத்துக்குள்ள உங்க பேப்பர் திரும்ப திருத்த பட்டு, உங்க பேப்பர் ஜெராக்ஸ் உங்க வீட்டுக்கே வரும். ஒரு அளவுக்கு எழுதி இருந்தாலே மேசிமம் பாஸ் ஆயிடலாம்.
        அட இல்லப்பா, பெயில் ஆயாச்சு, என்ன பண்ணலாம் னு கேக்குறீங்களா? முன்னாடி மாதிரி ஒரு வருஷம் நஷ்டம் லாம் கிடையாது, வர்ற ஜூன் ல ரிஎக்சம் எழுதிக்கலாம்.
        அடுத்த ஒரு குரூப் இருக்கு, அச்சச்சோ, எனக்கு மார்க் கம்மி, நினச்ச காலேஜ் கிடைக்காதே னு புலம்பும். வருங்கால ராஜ ராணிக்களே, உங்கள நம்பி தான் இருநூத்தி அம்பது இன்ஜினியரிங் காலேஜ் திறந்து வச்சு இருக்காங்க, கடைசி மூணு வருசத்துல, ஆள் இல்லாம சீட் வகான்ட் ஆ தான் இருந்து இருக்கு, எந்த மாணவருக்கும் சீட் இல்லாம போகல. நீங்க டென்த் ல எவ்ளோ மார்க் எடுதீங்கனு இப்ப யாரவது கேக்குறாங்களா? , அதே போல தான் நீங்க எவ்ளோ மார்க் இப்ப எடுத்து இருகீங்கங்கிறது நீங்க காலேஜ் ல சேருற வரைக்கும் தான்.
      அப்புறம் கடைசியா, நல்லா படிச்சு, ஸ்கூல் லெவெல்ல, ஊர் லெவெல்ல, மாவட்ட லெவெல்ல, ஸ்டேட் லெவெல்ல நல்ல மார்க்ஸ் எடுத்து இப்போ போட்டோக்கு போஸ் குடுத்துட்டு இருக்குற மாணவ, மாணவிகளுக்கும், ஸ்கூல் பீஸ், டியூஷன் பீஸ் கட்டி நொந்து அடுத்து காலேஜ் பீஸ் கட்ட தயார்    ஆகும் எல்லா அப்பா மார்களுக்கும், அதிகாலைல எழுந்து பசங்க படிக்க ரெடி பண்ணி, மெகா சீரியல் அ தியாகம் பண்ணுன எல்லா அம்மா மார்களுக்கும் வாழ்த்துக்கள்.

ஞாயிறு, 8 மே, 2011

மாஜி கவிஞன்

நான் ஒரு மாஜி கவிஞன்!
அப்போதெல்லாம் என் பேனா மூடி கழட்டினால் போதும்!
    கவிதைகளை பிரசவிக்கும்!
எந்த வகுப்பு ஆனாலும், நோட்டுபுத்தகங்கள் 
   கவிதைகளை வரவேற்க தயாராகும்!
கவிதை திரி ஏறிய, காதல் காவல் காக்கும்!
புகழுவதும், இகழுவதும் எல்லாமே கவிதையால் தான்!
கால சக்கரம் சுற்றிய வேகத்தில்,
வேலை தேடி சுற்றி சுற்றி அலைந்ததில்,
சமுத்திரமாய் நினைத்திருந்த திறமை பாலைவனமாய் சுண்டியது!
இப்போது நேரம் கிடைத்தால் கூட என் கை பேனா பிடிப்பது இல்லை!
ஆவியாகி போன கவிதைகளை யாரேனும் கண்டு பிடித்தால்,
    தயவு செய்து எனக்கு அனுப்பி விடாதீர்கள்!


நான் ஒரு மாஜி கவிஞன்!

கம்ப்யூட்டர் காதல்

என் பெற்றோர் கொடுக்கும் programs ஐ
    error message இல்லாமல் execute  செய்த கம்ப்யூட்டர் நான்!

எனக்குள் வைரஸாய் வந்தாய்!

இன்று பெற்றோரிடம் input வாங்கி உன்னிடம் output செய்கிறேன்!
காதல் தேர்தல்

உன் இதய தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளராகிய நான்,
 உன் விழி ஓட்டு கேட்டு வீதி வழி வருகிறேன்!

ஓட்டுரிமை இல்லை என்று கூறி கதவடைப்பவளே,
 கொஞ்சும் மொழிகள் கொஞ்சம் கேள்!

உன் புன்னகையே என் கொள்கை!
உன் தாவணியே என் கட்சி கொடி!
நீ குத்தும் போது வலிக்காமல் குத்தாத போது வலிக்கும் இதயம்
         என் சின்னம்!
உன் பெயர் உச்சரிக்கும் இதய துடிப்பு என் பிரசார பாடல்!

உன் இதய தொகுதிக்கு என் உயிரை டெபொசிட் ஆக கட்டியுள்ளேன்!
அதற்காக வேணும் என்னை தேர்ந்தெடு கண்ணே!



மத காவலர்களுக்கு

தோழர்களே!
சிங்கங்களாய் தானே இருந்தீர்கள்,
மதம் பிடித்த யானையாய் ஏன் மாறினீர்கள்?

மதங்களின் தூண்களே, ஒரு சந்தேகம்!

மனிதனை காக்க கடவுளா அல்லது
கடவுளை காக்க மனிதனா?

கடவுள்களின் கைகளில் இருந்து ஆயுதத்தை பிடிங்கினீர்கள்!
சந்தோஷ பட்டோம்!
உபயோக படுத்த மறுக்கிறார் என்று கடவுள் மீதே குற்றம் சட்டி
அந்த ஆயுதங்களை நீங்கள் உபயோகபடுத்தினீர்கள்!

அன்பை தொலைத்து ஆயுதம் தேடுபவர்களே!

மதம் என்பது ஒரு வழி அவ்வளவே!
பிறப்பில் இருந்து இறப்பு வரை நம்மை வழி நடத்தி செல்வது!
எந்த வழியில் சென்றாலும் முடிவு என்பது மரணம் மட்டுமே!

வழியின் முடிவில் முடிவு காத்திருக்க வேண்டும்!
வழியே முடிவாக கூடாது! 


கிளையில் அமர்ந்து கொண்டு 
      யாரும் மரம் வெட்டுவது இல்லை!
நீ மட்டும் ஏனடி 
    இதயத்தில் இருந்து கொண்டு உயிரை எடுக்கிறாய்!
                                                      என்ன செய்வாய் புத்தாண்டே!

மனிதற்கு மனம் தனை சரியாய் தருவாயா?
மழையை நேரத்தில் பொழிய செய்வாயா?
கடல் நீரை குடிநீராய் மாற்றி தருவாயா?
மதங்களை ஒன்றாய் இணைத்து விடுவாயா?
"இனங்கள் இல்லை" என்று ஆக்கி விடுவாயா?
வயல்கள் எல்லாம் பயிர்களால் நிறைப்பாயா? 
பசியை மனிதகுலம் மறக்க செய்வாயா?
தீவிர வாதத்தை பூமியிலிருந்து பிடுங்கி எறிவாயா?
"அன்பே கடவுள்" என்று அனைவர்க்கும் சொல்வாயா?
கண்ணீர் என்ற திரவத்தை மறக்க வைப்பாயா?
உணவு, உடை, உறைவிடம் அனைவர்க்கும் கொடுப்பாயா?
இல்லை,
இது போன்ற கனவுகள் மட்டுமே ஏராளமாய் கொடுப்பாயா?

kaviri

 கார்கிலில் காட்டியதோடு நம் "தேச ஒற்றுமை" என்னும் திரைப்படம் நிறைவு அடைந்ததா?
உங்களிடம் அணையில் மட்டுமே நீர் உள்ளது என்றால்,
                எங்களுக்கு எங்களின் கண்ணீர் போதும்,
இல்லை, இதயத்திலும் உங்களுக்கு நீர் இருந்தால்,
                 கொஞ்சம் இறக்கி விடுங்கள், அணையில் இருந்து! 
நான் உன்னை விரும்புவது உனக்கு தெரியும்!
ஆனால், உன்னால் என்னை விரும்ப முடிய வில்லை!
எனக்கும் அதே போல் தான்!
நீ என்னை வெறுப்பது எனக்கு புரிகிறது!
ஆனால், உன்னை மறப்பது என்னால் இயல வில்லை!

Santhegam!

சந்தேகம் ஆறாவது அறிவிற்கான அடையாள அட்டை!
மனிதனை விலங்கில் இருந்து வித்தியாசபடுத்துவது 
          முதுகுஎலும்பு மட்டும் அல்ல, மூளையும், சந்தேகமும் தான்!
எனக்கு சந்தேகங்கள் வகுப்பறையில் வந்ததே இல்லை!
இருபதாம் வயதில் இருப்பதால் பெரும்பாலான கணைகள்
              காதலை நோக்கியே செல்கின்றன!!

உதாரணத்திற்கு சில கணைகள் :
        காதல் மனித இனத்திற்கு வழங்க பட்ட வரமா, சாபமா?
        காதல் மனிதர்களுக்கு கூடா? கூண்டா?
        காதல் என்பது கடவுள்களுக்கு உண்டா? இல்லையா?
        எந்த கடவுளும் காதல் தோல்வியால் தற்கொலை செய்ததாய் தகவலே இல்லையே?
இந்த சந்தேகங்களுக்கு விடை தெரியாமல் போனாலும், ஒன்றிற்கு மட்டும் விடை சொல்லடி!

                       "நீ என்னை காதலிக்கிறாய் அல்லவா?"



தேச ஒற்றுமை என்பது கார்கிலில் மட்டும் இல்லை!!
கொஞ்சம் காவிரியிலும் காட்டு, என் கன்னட சகோதரனே!

Thanimai

உறவுகள் தொலைவது கலப்பதற்கே!
கலைந்த உறவுகள் தொலைவதற்கே! 
உறவுகள் எதுவும் நிலை இல்லை!
புரிந்து கொண்டால் ஏது மனக்கவலை!
உண்மை புரி! சிறகை விரி!
வானம் சிறகின் வசம்!

விலங்குகள் தனிமையில் மனிதர்களாம்!
மனிதர்கள் கூடத்தில் விலங்குகளாம்!
தனிமை உலகிற்கு போதிமரம்!
தவறுகள் திருத்த ஞானம் தரும்!
தடுமாற்றம் வாழ்வில் இருக்காது!
ஏமாற்றங்களும் நம்மை துரத்தாது!
கூடுவதால் தீமைகளே!
தனித்து இருப்போம் நாமே!

 


New Year

வன்முறை கொடுத்து கண்ணீர் வாங்கிய 
      கடந்த ஆண்டை மறந்திடுவோம்!

இன்பம் கொடுத்து புன்னகை வாங்கும்
     என்ற நம்பிக்கையில் புத்தாண்டை வரவேற்போம்!!

kattaya kavithai!

 கவிதைகள் பெரும்பாலும் காதலோடு சம்பந்த பட்டவை!
முதல் காதல், கவிதையின் "அ,ஆ" வை அறிமுகம் செய்யும்!
காதல் கடிதங்கள், கவிதையின் இளமை பருவம்!
நெஞ்சுக்குள் காதலை பொத்தி வைத்தவன் கவிதையிலே எரிமலையாய் இருப்பான்!
ஒன்று, இரண்டு காதல் தோல்வி கண்டவன், கம்பனுக்கே கவிதை கடன் கொடுப்பான்!
சமுதாயம், அரசியல், தேச பக்தி, பெண் முன்னேற்றம், தீண்டாமை
    இவைகளும் கவிஞர்களை உருவாக்கும்!
இந்த கவிதை எழுத காதல் சொல்ல வில்லை!
மேற் சொன்ன வகைகளும் எதுவும் இல்லை!
பிடிக்காத வகுப்பில் 2 மணி நேரம் அமர்ந்ததால் பிறந்த கட்டாய கவிதை!!




kathal kolvom!!

இளமை பருவ நந்தவனத்தில் கள்ளி செடி இந்த காதல்!
பொறுப்புக்கள் எல்லாம் மறக்க வைக்கும்!
விழிகள் திறந்தும் கனவுகள் கொடுக்கும்!
வகுப்பினில் கவிதை எழுத செய்யும்!
உதிர்ந்த பூ, சாக்கலேட் கவர் பொறுக்க வைக்கும்!
இமை இரண்டிற்கும் இடையில் நிற்கும்!
சுற்றம் எல்லாம் நம்மை பித்தனாய் பார்க்க வைக்கும்!
நிச்சயமாய் ஒரு நாள் இது
           கண்களில் துளி நீரை வைக்கும்!
           கன்னம் முழுவதும் தாடி வைக்கும்!
          தாகத்துக்கு மது கொடுக்கும்!
         தொட்டு கொள்ள விசமும் கொடுக்கும்!
காதல் கொடுப்பதை விடவும், நாம் இழப்பது அதிகம்!
ஆதலினால், காதல் கொல்வோம்!!!!

kallori kalathu kavithaigal

தலைப்பு ஒன்றும் கிடைக்க வில்லை 

எப்போதும் போர் அடிக்கும் கல்லூரி வகுப்புக்குள் நித்தம் ஒரு கவிதை பூ பூக்கும்!

இன்றைய தேதிக்கான பூ இன்னும் பூக்க வில்லை !

மதிய சாப்பாடு உறக்கம் கொடுத்ததாலா?
காதலி முகத்தை கருயானை மறைத்ததாலா?
எழுதி எழுதி பேனாவே சலித்ததலா?
எழதிய கவிதைகளில் மற்றவர் பேர் எழுதுவதலா?
வாழ்வே கொஞ்சம் வெறுத்து போனதலா?
எதனாலோ ஒரு பூவும் பூக்க வில்லை!
ஏதேனும் மருந்தடித்து பூப்பறிக்க ஆசை கொண்டேன்!
எட்டி எட்டி முகம் பார்த்து காதல் கவிதைக்கு தயார் ஆனேன்!
"கண்ணே, வானம், நிலா" இல்லாத கவிதைகள் தோன்ற வில்லை!
உள்ள சோகம் எல்லாம் எடுத்து கவிதை சொல்ல தயாரானேன்!
கண்ணீரில் மூழ்கிய பேனா கடைசி வரை கிடைக்க வில்லை!
"பெண்கள் பற்றிய வர்ணனை கவிதைகள்" எனக்கே பிடிக்க வில்லை!
"இளைங்கனே   எழு" போன்றவைகள் எழுத நான் லாயக்கில்லை!
இறந்தவர்கள் துதி பாடும் பழக்கம் எனக்கு இல்லை!
இவை தவிர தமிழ் மொழியில் கவிதை எழுத வகை கிடைக்க வில்லை!
இருந்தாலும் நான் என்னை தேற்றி கொண்டேன்,
"தலைப்பு ஒன்றும் கிடைக்க வில்லை" என்று!