tag Guru Paarvaigal: Right to Information Act - A glance

புதன், 1 ஜூன், 2011

Right to Information Act - A glance

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005

                       இந்தியாவில் 2005 ம் ஆண்டு வரை சாதாரண குடிமக்களுக்கு இருந்த அதிக பட்ச உரிமை அல்லது சக்தி என்பது வாக்குரிமையாக இருந்தது. வாக்கு உரிமையின் மூலம் தங்களை ஆள்பவர்களை தேர்ந்து எடுக்க முடியும் என்றாலும், அதன் மூலம் உடனடி பிரச்சனைகளை தீர்க்க முடியாது. அது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பணம், பிரியாணி, குவார்டர் மட்டுமே பெற பயன் படும். அதிக பட்சமாக தேர்தல் சமயத்தில் சாலைகள் சரி செய்ய படலாம், மின் தடை இல்லாமல் இருக்கலாம், குடி நீர் கூட தினம் வரலாம். ஆனால், இந்த அதிக பட்சங்கள் நீங்கள் வாக்கு சாவடியில் பொத்தானை அழுத்தியதும், "வரங்களை அளித்து விட்ட பூதம்" போல விளக்கிற்குள் ஒளிந்து விடும் என்பதை நாடே அறியும். தேர்தல் பிரச்சாரத்திற்கு நடிக, நடிகைகள், அரசியலில் உள்ள அனைவரும் உங்கள் வீடு தேடி வருவார்கள். அவர்களை சுற்றி வந்து சேவித்து கொள்ளலாம், மறுபடி அவர்களது கால்ஷீட் ஐந்து வருடங்களுக்கு பிறகு தான் கிடைக்கும். தேர்தல் என்பது திருவிழாவாகவும், பொழுது போக்கு அம்சமாகவும் ஆன பிறகு, அதை பற்றி இவ்வளவு தூரம் எழுத வேண்டியதற்கு காரணம், வாக்கு உரிமையை விட அதிக சக்தியை சாதாரண குடிமகனுக்கு, தகவல் அறியும் உரிமை சட்டம் அளித்துள்ளதை படம் வரைந்து பாகம் குறிக்கவே.

             தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI - Right to information Act) என்பது பத்திரிகை சுதந்திரத்தில் இருந்து ________ (derived க்கு சரியான தமிழ் வார்த்தை போட்டு கொள்ளவும்) பெற்றது. ஒரு பத்திரிகை எல்லா செய்திகளையும் வெளியிட உரிமை உள்ளது என்றால் எல்லா இந்தியர்களும் எல்லா செய்திகளையும் தெரிந்து கொள்ள உரிமை உள்ளவர்கள் ஆகிறார்கள். தர்க்க ரீதியாக ( logical point of view இல்) இது சரி என்றாலும், பெரும்பாலான விஷயங்கள் ஒளிவு மறைவு இல்லாமல் நடப்பது இல்லை. எனவே, தகவல் அறியும் உரிமை ஒரு சட்டமாக இயற்ற பட்டது. இந்த சட்டத்தை பற்றிய புத்தகங்கள், கையேடுகள் தான் தற்போது அதிக அளவில் விற்பனை ஆகி வருகிறது. சட்ட புத்தங்களில் உள்ள படியே டைப் செய்தால், நீங்கள் இனி இந்த ப்ளாக் பக்கம் எட்டி கூட பார்க்க மாட்டீர்கள் என்பதால் முடிந்த வரை சிம்பிளாக எழுத முயற்சிக்கிறேன்.

                   இந்த சட்ட படி, தகவல் என்பது அரசு அலுவகங்களில் பாதுகாக்க பட்டு வரும் எல்லா ஆவணங்களையும் குறிக்கும். இந்திய குடிமகனாக உள்ள யார் வேண்டுமானாலும் எந்த அரசு அலுவலத்திலும், தனக்கு வேண்டிய அரசு சார்ந்த விசயங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு எந்த ஆபிசில் எந்த விவரம் வேண்டுமோ அதை பற்றி ஒரு பேப்பரில் எழுதி, பத்து ரூபாய் கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பினால் போதும்,30 நாட்களுக்குள் நீங்கள் கேட்ட விவரம் உங்கள் வீடு தேடி வரும். நீங்கள் ஏன் இந்த விவரங்களை கேட்கிறீர்கள் என்றெல்லாம் சொல்ல வேண்டியது இல்லை. இது இந்த சட்டத்தின் சாராம்சம்.

                 RTI க்கு அரசு அதிகாரிகள் முக்கிய துவம் கொடுப்பார்கள். ஏனெனில் 30 நாட்களுக்குள் மனுதாரர் கேட்ட விவரம் அளிக்கப்படா விட்டால், அதிக பட்சமாக 25,000/- அபராதம் விதிக்க படலாம். ஒரு அலுவலத்துக்கு RTI விண்ணப்பம் ஒன்று வந்து விட்டால், அனைவருமாக சேர்ந்தாவது அந்த விண்ணப்பத்துக்கு பதில் அனுப்பி விட்டு தான் அடுத்த வேலை செய்கிறார்கள். சட்டம் இயற்ற பட்ட நாள் முதல் நீங்கள் இதை படித்து கொண்டிருக்கும் இந்த நேரம் வரை லட்ச கணக்கான மக்களின் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் அளித்து இருக்கிறார்கள்.

       எல்லாம் சரி, இவ்வளவு பெரிய சக்தியை பொது மக்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.  அப்படியானால், இந்தியாவில், சங்கர் படங்களில் வருகிற கிளைமாக்ஸ் காட்சி போல ஒளிவு மறைவு அற்ற நல்லாட்சி வந்து விடுமா என்றால் அப்படியெல்லாம் ஒன்றும் பெரிய மாற்றம் இல்லை என்றே தெரிகிறது. ஏனெனில், மக்கள் பொது நலத்துக்காக எந்த ஒரு விவரமும் கேட்பதில்லை. தங்கள் சொந்த பிரச்சினைகளை தீர்த்து கொள்ள உதவும் ஒரு கருவியாக மட்டுமே RTI ஐ பயன்படுத்துகிறார்கள். இந்த சட்டத்தில் அதிமாக கேட்க படும் கேள்வி என்ன என்றால் " நான் கொடுத்த மனு என்ன ஆச்சு?" என்பது தான். இதில் கேள்வி கேட்ட காரணத்திற்காகவே அவர் கொடுத்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க படுகிறது.

        இரு தனி நபர்களிடையே பிரச்சனை என்றால், ஒருவர் அடுத்தவர் மீது புகார் கூறி ஒரு மனு, பின்னாலேயே RTI ல் ஒரு மனு. இப்படி தனக்கு அருகில் உள்ளவர்களை மிரட்ட சிலர் இதை ஆயுதமாக வைக்க பழகி உள்ளனர். இன்னொரு பிரகஸ்பதி, 73 பெயர்களில் ஒரு அலுவலத்துக்கு தொடர்ச்சியாக ஸ்ரீராமஜெயம் எழுதுவது போல RTI இல் கேள்வி மேல் கேள்விகள் கேட்டுள்ளார். பதில் அளித்து பதில் அளித்து சோர்ந்து போன அதிகாரிகள் போலீசில் புகார் செய்ய, அந்த பிரகஸ்பதி, பணம் வாங்கி கொண்டு இவ்வாறு செயல் பட்டது தெரிய வந்துள்ளது.  இது இந்த சட்டம் தெரிந்து, தவறாக பயன்படுத்துபவர்கள்.
                           
     சில அப்பாவிகள், எந்த கேள்வி கேட்டாலும் பதில் வரும் என்கிற நினைப்பில், கரகாட்ட காரன் திரைப்படத்தில் செந்தில் கேட்பது போல " நடிகை சொப்பன சுந்தரி வச்சு இருந்த காரை நாம வச்சு இருக்கோம், காரை வச்சு இருந்த சொப்பன சுந்தரியை இப்ப யார் வச்சு இருக்காங்க"னு கேட்க நினைகிறார்கள். மேற்படி விஷயம் குறித்து எந்த அரசு அலுவலத்திலும் பைல் வைத்து இருக்க மாட்டார்கள்.

            முடிவாக, இந்த RTI சட்டம் என்பது ஒரு பிரம்மாஸ்திரம். நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளவர்கள் மீது இதை பிரயோக படுத்துங்கள், பல் குத்தும் குச்சியாக பயன் படுத்தாதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக