tag Guru Paarvaigal

சனி, 18 ஜூன், 2011

மனிதன் உருவான விதம் 

சார்லஸ் டார்வினின் "தியரி ஆப் எவலுஷன்" யை சுருக்கமாக விளக்கி விடலாம். உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டவை. "சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட்" (வல்லவன் வாழ்வான்?) என்னும் விதிப்படி, சுற்றுப்புற சூழ்நிலைகளோடு ஒத்து போகாத உயிரினங்கள் அழிந்தன; உயிரினங்கள் சூழ்நிலைகளை சமாளிக்க தேவையான சில மாற்றங்கள் தோன்றின. அந்த மாற்றங்களினால் பல புதிய உயிரினங்கள் தோன்றின. இவ்வாறு தோன்றிய தற்போதைய கடைசி உயிரினம் தான் மனிதன். இந்த தியரியை அடிப்படையாக வைத்து தான் பரிணாமம் பற்றி பெரும்பாலான விளக்கங்கள் உள்ளன.

திடீரென்று, இதை பற்றி எழுத காரணம் நண்பர் ஆரோணன் அவர்கள் பரிணாமம் மெய்யா? பொய்யா? என்னும் தலைப்பில் பல்வேறு மதத்தை சேர்ந்த நண்பர்களின் கருத்துகளை கோரி இருந்தார்; அது குறித்த மொத்த விளக்கங்களையும் எனது பார்வையில் அளிக்கவே.

முதலில் பூமியில் ஒரு செல் உயிரினங்கள் தோன்றி, தற்போது மனிதன் வரைக்குமான பரிணாம வளர்ச்சி அட்டவணையினை விக்கிபிடியாவில் அளித்துள்ளனர்.http://en.wikipedia.org/wiki/Timeline_of_human_evolution என்கிற லிங்கில் அந்த அட்டவணையினை பார்க்கலாம்.

அறிவியல் போதும் என்று நினைக்கிறேன். 

மதங்களின் பார்வையில் மனிதன் தோன்றிய விதம் குறித்த விவரங்கள் சரியானவைகளாக இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. நாம் பார்த்த பரிணாம கோட்பாடுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்க பட்டவை. பெரும்பாலான மதங்கள் கூறிய விவரங்கள் பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்கு முன்னால் தெரிவிக்க பட்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஒரு நான்கு வயது சிறுமி பெற்றோரிடம் "தங்கச்சி பாப்பா எப்படி பிறந்தது?" என்று கேட்டால், சாமி குடுத்துச்சு என்று பொய் சொல்வது போலவே, அந்த நூற்றாண்டுகளில் யாரோ சிலர் "மனிதன் எப்படி உருவானான்?" என்று கேட்டதற்கு பதிலாக சொன்ன கதைகளாக தான் அவை இருக்க வேண்டும் என்று தெரிகிறது.

இந்து மதத்தை பொறுத்த வரை, கடவுள்களிடம் பணி ஒதுக்கீடு உள்ளது. படைத்தல் தொழில் "கடவுள் பிரம்மா"வின் இலாகா. எல்லாவற்றையும் அவர் தான் படைக்கிறார். எனவே மனிதனின் படைப்பு பற்றிய கேள்விக்கு பதிலாக "கடவுள் பிரம்மா" இருக்கிறார். உங்களையும் என்னையும் நமது பெற்றோர்கள் தான் படைத்தார்கள் என்பது அறிவியல்.

பரிணாமம் பற்றிய கேள்விகளுக்கு இந்து மதத்தில் விளக்கங்கள் இல்லை என்றாலும், "கடவுள் மகா விஷ்ணு"வின் பத்து அவதாரங்களில் கொஞ்சம் பரிணாமம் உள்ளது. மச்ச அவதாரம் என்று கடல் வாழ் உயிரனமான மீனில் இருந்து, கூர்மம் (tortoise), வராஹம் (பன்றி), நரசிம்மம்(பாதி சிங்கம், பாதி மனிதன்), வாமணன்(குள்ள மனிதன்), பரசுராமன் (கோடாலி செய்ய தெரிந்த கோப மனிதன்), ராமன்(வில் அம்புகள் கொண்ட, நகர குடியமைப்புகள் கொண்ட மனிதன்), பலராமர் (கலப்பை கொண்டு விவசாயம் செய்பவர்), கிருஷ்ணன் (சூப்பர் மென் கேரக்டர்), இதற்க்கு அப்பால் என்ன என்று தெரியாத கல்கி அவதாரம் என உயிரினங்கள் நீரில் இருந்து ஆரம்பித்து, கல்கி வரை செல்லும் பரிணாம வளர்ச்சி குறிப்பிட படுவதாக சிலர் சொல்கின்றனர். 

இந்த வரிசையில், உயிரினங்கள் நீரில் ஆரம்பித்து தற்போது தரையில் வாழும் நிலை வரை எடுத்துரைக்க பட்டாலும், திமிங்கலம் போன்ற சில உயிரினங்கள் தரையில் வாழ்ந்து பின் மீண்டும் நீருக்குள் சென்ற வரிசைகள் நிரப்பப் படவில்லை.

நல்ல வேளையாக, பகவத் கீதையில் மனிதனை படைத்தது பற்றி எந்த குறிப்பும் இல்லாததால், இந்து சமய மக்களுக்கு பரிணாம கொள்கையினை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. (முதலில் மகாபாரத இதிகாசம் எழுதப்பட்ட போது பகவத் கீதை அதில் இல்லை. பிற்பாடு, தனியாக எழுத பட்டு, அதை மகாபாரத நூலில், போர்க்கள காட்சியில் இடைச்செருகல் பண்ண பட்டது என்றும் ஒரு கருத்து உள்ளது.)

கிறித்தவ மக்களின் புனித நூலான பைபிளில் " கடவுள் முதல் நாள் ஒளியை உண்டாக்கி இருளில் இருந்து பிரித்தார்; இரண்டாம் நாள் வானத்தை படைத்தார்; மூன்றாம் நாள் நிலப்பகுதிகளையும், கடல்களையும், மரம், செடி, கொடிகளையும் படைத்தார்; நான்காம் நாள் சூரியன், நிலா மற்ற நட்சத்திரங்களையும் பூமிக்கு ஒளி தர படைத்தார்;  ஐந்தாம் நாள் நீர்வாழ் உயிரினங்களையும், பறவைகளையும், படைத்தார்; ஆறாம் நாள் மற்ற விலங்குகளோடு மனிதனையும் படைத்து, பின் ஏழாம் நாள் ஓய்வு எடுத்ததாக" தெரிவிக்க பட்டுள்ளது.

நம்மை நேரடியாக கடவுள் படைத்தார் என்று நம்பி கொண்டிருக்கும் போது, குரங்கில் இருந்து தவறி தான் நாம் உருவானோம் என்று சொன்னால், ஏற்படும் கோபம் புரிந்து கொள்ள கூடியதே. 

மதங்கள் கூறிய சில விஷயங்கள், பொய் என நிரூபிக்க பட்டதால் கடவுள் இல்லை என்று அர்த்தம் இல்லை. கடவுள் பற்றி நாம் கொண்டு இருக்கும் கருத்துக்கள், அவருக்கு நாம் சூட்டிய பெயர்கள், வழிபடும் முறைகளில் தான் பொய் உள்ளது. இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை படைத்த பரம்பொருளை யோசிக்க, நமக்கு உள்ள 1300-1400 கிராம் மூளை போதாது என்றே தோன்றுகிறது. மற்ற படி, நாம் எப்படி தோன்றினோம் என்றே நமக்கு தெரியாத போது, படைத்தவன் பற்றிய கதைகள் பரப்புவதையும், கடவுளின் பெயரில் சண்டைகள் போடுவதையும் நிறுத்துவோமாக.

ஆமென்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக