tag Guru Paarvaigal: ஜூன் 2011

வெள்ளி, 24 ஜூன், 2011

Death Sentences


மனதை திடப்படுத்தி கொள்ளுங்கள். இந்த பதிவில் தொடர இருப்பவை நிறைய மரணங்கள்; கொல்லும் வழிகள்; நிறைய வலிகள்.அதற்காக இளகிய மனம் படைத்தவர்கள் இதை படிக்க வேண்டாம் என்றெல்லாம் ஒதுங்கி விட வேண்டாம். கொலைகளை ரத்தமும் சதையுமாக நாம் பார்க்க போவதில்லை; தியேட்டரில் பேய் படம் பார்ப்பதை போல ஒரு கண்ணை மூடி கொண்டு, கொலைகளுக்கான காரணங்கள் மற்றும் சில சரித்திர குறிப்புகளும், ஆராய்ச்சிகளையும் மட்டுமே மற்றொரு கண்ணால் பார்க்கலாம்.

மனித இனம் தோன்றிய உடனே அரங்கேற்ற பட்டவை, கொலைகள். குரங்கிற்கு அடுத்த உயரிய உயிரனமாக தோன்றியது நமது மனித இனமும், நியாண்டர்தால் மனித இனமும்; நியாண்டர்தால் இனத்தினை முழுவதுமாக கொன்று அழித்த பின்னர் தான் மனித இனம் வளர்ந்தது என்பது வரலாறு. அது வரை விலங்குளை விலங்குகள் வேட்டையாடியது முடிந்து கொலை என்கிற வார்த்தை கண்டு பிடிக்க பட்டது.

கொலையால் வளர்ந்த இனம் என்பதாலோ என்னவோ, மனித மனங்களுக்குள் கொடூரமான கொலை எண்ணங்கள் உள்ளன.

 ஒரு ஆய்வில் கண்ணாடி தடுப்புக்கு ஒருபுறம் தேர்ந்த நடிகர்கள் நிறுத்தப்பட்டு அவர்களின் தலையில் இரும்பு கவசம் பொறுத்த பட்டது. மறுபுறம் ஆய்வுக்கு வந்தவர்களின் கைகளில் கரண்ட் ஷாக் கொடுக்கும் கருவி வழங்க பட்டது. ஆய்வுக்கு வந்தவர்கள் நடிகர்களிடம் கேள்விகள் கேட்க வேண்டும். தவறாக விடை சொன்னால், அவர்களுக்கு கரண்ட் ஷாக் கொடுக்கலாம் என்று தெரிவிக்க பட்டது. உண்மையில் அங்கே கரண்ட் எதுவும் இணைக்க பட வில்லை. ஆய்வுக்கு வந்தவர்கள் கொடுக்க நினைக்கும் கரண்ட் அளவு நடிகர்களுக்கு தெரிவிக்க பட, அதற்க்கு ஏற்றார் போல் அவர்கள் வலியில் துடிப்பது போல நடிப்பார்கள். ஆய்வின் போது முதலில் மிக குறைவான அளவில் ஆரம்பித்து, நடிகர்கள் கரண்ட் ஷாக் அடிப்பதை போல நடிப்பதை பார்த்ததும் வெறியேறி மிக மிக அதிக அளவில் கரண்ட் ஷாக் கொடுத்துள்ளனர் ஆய்வுக்கு வந்த சாதாரண மக்கள். ஆய்வின் முடிவு என்ன என்றால், தங்களுக்கு தீங்கு ஏதும் நேராது என்றால், யாரை வேண்டுமானாலும் கொலை செய்ய மனிதர்கள் தயங்குவது இல்லை என்பதே.

"எனக்கு வரும் கனவுகளில், சமயங்களில் பெண்கள் வருகிறார்கள்; என்னை கிளர்ச்சியுற செய்கிறார்கள்;சில கனவுகளில் சிலர் என்னை தாக்க வருகிறார்கள், நான் அவர்களுடன் வன்முறையாக சண்டை போடுகிறேன்; பாதி கனவிலேயே நான் யார் என்பதை உணர்ந்து அவைகளை கை விடுகிறேன்" - இப்படி சொல்லி இருப்பவர் சாட்சாத் தலாய் லாமா. அவர் யார் என்று கேட்பவர்களை திபெத்தில் லாட்டரி விற்க வைக்கலாம். அப்பேர் பட்ட துறவிக்கே காம, குரோத எண்ணங்கள் வந்தால் சாதாரண மனிதனுக்கு எவ்வளவு வரும்? அதிகாரமும், பலமும் கொண்ட மன்னர்களுக்கு கொலை உணர்ச்சி எவ்வளவு இருந்து இருக்கும்?

மன்னராட்சி இருந்த காலங்களில் ராஜ துரோகங்களுக்கு மரண தண்டனை விதிக்க பட்டது. முதன் முதல் மரண தண்டனை விதித்த மன்னர் யார் என்று எங்கே தேடியும் தெரிய வில்லை.

இதிகாசங்களில் ராமாயண, மகாபாரத்தில் போர்கள் நடந்ததாகவும், பல்லாயிரக் கணக்கில் உயிர்கள் கொல்ல பட்டதாகவும் வருகிறது. முறையாக வாகனம் ஓட்டாததால்  ( drunk & driving ah என்று தெரிய வில்லை), மகனுக்கு மரண தண்டனை வழங்கிய மனுநீதி சோழன் பற்றிய வரலாறு பள்ளியிலேயே படித்து இருக்கிறோம்.

இந்திய அரசர்களை பொறுத்த வரை, ராஜ துரோகம் மற்றும் கடவுளை பழிப்பவர்களை மட்டும் கழுவிலேற்றி கொல்லும் வழக்கம் இருந்துள்ளது. மற்ற படி, எப்போதாவது நடை பெரும் போர்களில், அவர்களின் வன்முறை உணர்ச்சிக்கு வடிகால் இருந்துள்ளது.

இந்தியாவின் மீது முகாலய பேரரசர்கள் படை எடுத்து வந்த போது தான் கொலைகளின் வகைகள் தெரிய வந்துள்ளது. முகம்மது பின் துக்ளக் என்பவனிடம் சண்டை இட்டு தோற்ற அரசன் உடனே தனது கழுத்தை வெட்டி கொன்று விடுமாறு கெஞ்சி உள்ளான். காரணம் உயிரோடு பிடி பட்டால், அவனது சித்திரவதைகளை தாங்க முடியாது. அந்த அரசனுக்கு கிடைத்த தண்டனையை எழுதவே சற்று தயக்கமாக உள்ளது. தண்டனையை தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் அடுத்த பத்திக்கு சென்று விடவும். சண்டையில் பிடிபட்ட அரசன் உயிரோடு இருக்கும் போதே, அவனது தோல் முழுவதும் உரித்து எடுக்கப்பட்டது. எடுக்க பட்ட தோலுக்குள் வைக்கோல் அடைக்கப்பட்டு அரண்மனை வாசலில் தொங்க விட பட்டது. மேலும் அவனது உடல் கொஞ்சம் கொஞ்சமாக வெட்ட பட்டு, அந்த மாமிசம் அவனது உறவினர்களுக்கு வலுக்கட்டாயமாக வாயில் உணவாக திணிக்கப் பட்டது.

மன்னராட்சியின் முடிவில் ஆங்கிலேயர் வந்தனர். அவர்களின் சட்டத்தில் பழகி போன பழைய தூக்கு மட்டுமே இருந்தது. சுவாரசியமான கொலைகள் என்று அவர்கள் எதுவும் செய்த மாதிரி இல்லை. இந்த சமயத்தில் ஜெர்மனியின் ஹிட்லர் பற்றி ஞாபகம் வரவில்லை என்றால் அவன் செய்த 15-17 மில்லியன் கொலைகளுக்கு மதிப்பே இல்லாமல் பொய் விடும். சின்ன அறைக்குள் வேற்று மதத்தினவர் என்ற ஒரே காரணத்திற்காக அவ்வளவு யூதர்களை அடைத்து, விஷ வாயு அனுப்பி, கூட்டம் கூட்டமாக எம உலகிற்கு டிக்கெட் கிழித்து கொடுத்துள்ளான்.

இந்த கொடூரங்கள் எல்லாவற்றையும் ஏன் எழுத வேண்டி இருக்கிறது என்றால் இலங்கை இராணுவம் செய்த சில கொலைகளை இணையத்தில் பார்த்ததாலேயே.

மிருகத்தில் இருந்து அப்போது தான் தோன்றினோம், ஆதலால் நியாண்டர்தால் மனிதர்கள் கொலை செய்ய பட்டது அறியாமையிலும், அறிவு வளர்ச்சியின்மையாலும் செய்ய பட்டதாகிறது.

அரசர்கள் தங்கள் ராஜ்ஜியத்தை காப்பாற்ற செய்த கொலைகள், பதவி ஆசையில், அறிவிழந்து செய்ய பட்டவைகள் ஆகின்றன;

வேற்று மத துவேசத்தில் கொலைகள் செய்த ஹிட்லர், மீண்டும் ஒரு மிருகமாகவே வரலாற்றில் தெரிகிறான். அந்த நேரத்தில் அறிவியல் முன்னேற்றங்கள் குறிப்பிடும் படி வளர வில்லை. அதனால் மத நம்பிக்கையில் வேருன்றி, அவ்வாறு செய்து விட்டான் என்பதை நாம் சிறிது யோசிக்கலாம்.

ஆனால், எனது அறையில் இருந்து நான் எழுதும் இந்த கட்டுரையை உலகம் முழுவதும் வாசிக்கும் அளவுக்கு அறிவியல் வளர்ந்த பின்னும், பார்க்காத கடவுளுக்காக பாகிஸ்தான் இராணுவம் இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்பி மக்களை கொல்கிறார்கள்; இலங்கை இராணுவமோ சொந்த நாட்டு மக்களையே வேற்று மொழியான தமிழ் பேசும் ஒரே காரணத்திற்க்காக கொன்று குவிக்கிறார்கள்; அவர்கள் இன்னும் விலங்காகவே இருக்கிறார்கள்.

பலத்தால் மட்டுமே நீடித்தது மிருகங்களின் வரலாறு.அன்பால் மட்டுமே நிலைத்து இருப்பதே நாம் மனிதர்களாக வளர்ச்சி அடைந்ததற்கான சான்றாகும்.

வன்முறையை விடுத்து அவர்களும் பரிணாம வளர்ச்சி பெற்று, மனிதர்களாகட்டும். 


சனி, 18 ஜூன், 2011

மனிதன் உருவான விதம் 

சார்லஸ் டார்வினின் "தியரி ஆப் எவலுஷன்" யை சுருக்கமாக விளக்கி விடலாம். உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டவை. "சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட்" (வல்லவன் வாழ்வான்?) என்னும் விதிப்படி, சுற்றுப்புற சூழ்நிலைகளோடு ஒத்து போகாத உயிரினங்கள் அழிந்தன; உயிரினங்கள் சூழ்நிலைகளை சமாளிக்க தேவையான சில மாற்றங்கள் தோன்றின. அந்த மாற்றங்களினால் பல புதிய உயிரினங்கள் தோன்றின. இவ்வாறு தோன்றிய தற்போதைய கடைசி உயிரினம் தான் மனிதன். இந்த தியரியை அடிப்படையாக வைத்து தான் பரிணாமம் பற்றி பெரும்பாலான விளக்கங்கள் உள்ளன.

திடீரென்று, இதை பற்றி எழுத காரணம் நண்பர் ஆரோணன் அவர்கள் பரிணாமம் மெய்யா? பொய்யா? என்னும் தலைப்பில் பல்வேறு மதத்தை சேர்ந்த நண்பர்களின் கருத்துகளை கோரி இருந்தார்; அது குறித்த மொத்த விளக்கங்களையும் எனது பார்வையில் அளிக்கவே.

முதலில் பூமியில் ஒரு செல் உயிரினங்கள் தோன்றி, தற்போது மனிதன் வரைக்குமான பரிணாம வளர்ச்சி அட்டவணையினை விக்கிபிடியாவில் அளித்துள்ளனர்.http://en.wikipedia.org/wiki/Timeline_of_human_evolution என்கிற லிங்கில் அந்த அட்டவணையினை பார்க்கலாம்.

அறிவியல் போதும் என்று நினைக்கிறேன். 

மதங்களின் பார்வையில் மனிதன் தோன்றிய விதம் குறித்த விவரங்கள் சரியானவைகளாக இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. நாம் பார்த்த பரிணாம கோட்பாடுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்க பட்டவை. பெரும்பாலான மதங்கள் கூறிய விவரங்கள் பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்கு முன்னால் தெரிவிக்க பட்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஒரு நான்கு வயது சிறுமி பெற்றோரிடம் "தங்கச்சி பாப்பா எப்படி பிறந்தது?" என்று கேட்டால், சாமி குடுத்துச்சு என்று பொய் சொல்வது போலவே, அந்த நூற்றாண்டுகளில் யாரோ சிலர் "மனிதன் எப்படி உருவானான்?" என்று கேட்டதற்கு பதிலாக சொன்ன கதைகளாக தான் அவை இருக்க வேண்டும் என்று தெரிகிறது.

இந்து மதத்தை பொறுத்த வரை, கடவுள்களிடம் பணி ஒதுக்கீடு உள்ளது. படைத்தல் தொழில் "கடவுள் பிரம்மா"வின் இலாகா. எல்லாவற்றையும் அவர் தான் படைக்கிறார். எனவே மனிதனின் படைப்பு பற்றிய கேள்விக்கு பதிலாக "கடவுள் பிரம்மா" இருக்கிறார். உங்களையும் என்னையும் நமது பெற்றோர்கள் தான் படைத்தார்கள் என்பது அறிவியல்.

பரிணாமம் பற்றிய கேள்விகளுக்கு இந்து மதத்தில் விளக்கங்கள் இல்லை என்றாலும், "கடவுள் மகா விஷ்ணு"வின் பத்து அவதாரங்களில் கொஞ்சம் பரிணாமம் உள்ளது. மச்ச அவதாரம் என்று கடல் வாழ் உயிரனமான மீனில் இருந்து, கூர்மம் (tortoise), வராஹம் (பன்றி), நரசிம்மம்(பாதி சிங்கம், பாதி மனிதன்), வாமணன்(குள்ள மனிதன்), பரசுராமன் (கோடாலி செய்ய தெரிந்த கோப மனிதன்), ராமன்(வில் அம்புகள் கொண்ட, நகர குடியமைப்புகள் கொண்ட மனிதன்), பலராமர் (கலப்பை கொண்டு விவசாயம் செய்பவர்), கிருஷ்ணன் (சூப்பர் மென் கேரக்டர்), இதற்க்கு அப்பால் என்ன என்று தெரியாத கல்கி அவதாரம் என உயிரினங்கள் நீரில் இருந்து ஆரம்பித்து, கல்கி வரை செல்லும் பரிணாம வளர்ச்சி குறிப்பிட படுவதாக சிலர் சொல்கின்றனர். 

இந்த வரிசையில், உயிரினங்கள் நீரில் ஆரம்பித்து தற்போது தரையில் வாழும் நிலை வரை எடுத்துரைக்க பட்டாலும், திமிங்கலம் போன்ற சில உயிரினங்கள் தரையில் வாழ்ந்து பின் மீண்டும் நீருக்குள் சென்ற வரிசைகள் நிரப்பப் படவில்லை.

நல்ல வேளையாக, பகவத் கீதையில் மனிதனை படைத்தது பற்றி எந்த குறிப்பும் இல்லாததால், இந்து சமய மக்களுக்கு பரிணாம கொள்கையினை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. (முதலில் மகாபாரத இதிகாசம் எழுதப்பட்ட போது பகவத் கீதை அதில் இல்லை. பிற்பாடு, தனியாக எழுத பட்டு, அதை மகாபாரத நூலில், போர்க்கள காட்சியில் இடைச்செருகல் பண்ண பட்டது என்றும் ஒரு கருத்து உள்ளது.)

கிறித்தவ மக்களின் புனித நூலான பைபிளில் " கடவுள் முதல் நாள் ஒளியை உண்டாக்கி இருளில் இருந்து பிரித்தார்; இரண்டாம் நாள் வானத்தை படைத்தார்; மூன்றாம் நாள் நிலப்பகுதிகளையும், கடல்களையும், மரம், செடி, கொடிகளையும் படைத்தார்; நான்காம் நாள் சூரியன், நிலா மற்ற நட்சத்திரங்களையும் பூமிக்கு ஒளி தர படைத்தார்;  ஐந்தாம் நாள் நீர்வாழ் உயிரினங்களையும், பறவைகளையும், படைத்தார்; ஆறாம் நாள் மற்ற விலங்குகளோடு மனிதனையும் படைத்து, பின் ஏழாம் நாள் ஓய்வு எடுத்ததாக" தெரிவிக்க பட்டுள்ளது.

நம்மை நேரடியாக கடவுள் படைத்தார் என்று நம்பி கொண்டிருக்கும் போது, குரங்கில் இருந்து தவறி தான் நாம் உருவானோம் என்று சொன்னால், ஏற்படும் கோபம் புரிந்து கொள்ள கூடியதே. 

மதங்கள் கூறிய சில விஷயங்கள், பொய் என நிரூபிக்க பட்டதால் கடவுள் இல்லை என்று அர்த்தம் இல்லை. கடவுள் பற்றி நாம் கொண்டு இருக்கும் கருத்துக்கள், அவருக்கு நாம் சூட்டிய பெயர்கள், வழிபடும் முறைகளில் தான் பொய் உள்ளது. இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை படைத்த பரம்பொருளை யோசிக்க, நமக்கு உள்ள 1300-1400 கிராம் மூளை போதாது என்றே தோன்றுகிறது. மற்ற படி, நாம் எப்படி தோன்றினோம் என்றே நமக்கு தெரியாத போது, படைத்தவன் பற்றிய கதைகள் பரப்புவதையும், கடவுளின் பெயரில் சண்டைகள் போடுவதையும் நிறுத்துவோமாக.

ஆமென்.


புதன், 15 ஜூன், 2011

India's recent trend in marriages

இந்தியாவில் மணவியலும் மனவியலும்

தலைப்பு மிக கடினமாக அமைந்து விட காரணம் இந்த வாரம் சென்னையில் நடந்த ஒரு கொலை சம்பவம். கொல்லப் பட்ட பார்த்தசாரதி என்னும் நபர் காதலித்து திருமணம் செய்தவர். கூலியாட்கள் கொலை செய்து உள்ளனர். பணம் கொடுத்து கூலியாட்களை ஏவி விட்டவர் காதல் மனைவியின் தந்தை. இந்த மூன்று வரிகள் போதும், ஒரு காதல் திரைக்கதையை நாம் கோடிட்ட இடத்தில் நிரப்பிக் கொள்ள.

இந்த சம்பவத்தை நாளிதழ்களில் படிக்கும் போதே மூணாறில் நடைபெற்ற, அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க இயலாத, ஒரு கொலை சம்பவம் ஞாபகத்தில் வருகிறது. புதிதாக திருமணமான ஜோடி தேனிலவுக்காக மூணாறு வந்தனர்; கணவர் கொல்ல படுகிறார்; கொன்றவர் மனைவியின் காதலன்; கடைசி வார்த்தைக்கு முன்பாக "கள்ள" என்ற வார்த்தையை சேர்த்து இருந்தன அப்போது வந்த பத்திரிக்கைகள்.
கொலையான அனந்தராமன் மனைவியுடன் அவருடைய கடைசி புகைப்படத்தில் 


இரண்டு பத்திகளுக்கும் ஒற்றுமை என்ன என்றால் " ஒரு காதல்; ஒரு திருமணம்; ஒரு கொலை;". காதலர்கள் விரும்பி பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்தால் பெற்றோர்கள் கொலை செய்யவும் தயங்க வில்லை என முதல் பத்தி செய்தியும், கட்டாய திருமணம் செய்தால் காதலர்கள் கொலை செய்ய தயங்க மாட்டார்கள் என்பதை இரண்டாம் பத்தி செய்தியும் தெரிவிக்கிறது.

"அந்த காலங்களில் இப்படி நடந்தது இல்லை; இதற்க்கு காரணம் இப்போதைய தலைமுறை காதல் செய்வது தான்" என்று பேருந்தில் வரும் போது ஒரு பெரியவர் சொல்லி கொண்டு இருந்தார். அது சரியா? என்பதை பற்றி நிறைய யோசிக்க வேண்டி உள்ளது. ஏதோ காதல் என்பது இந்த பத்து ஆண்டுகளுக்குள் மட்டுமே இந்த உலகிற்கு வந்தது போல அவரது பேச்சு இருந்தது.

கலாச்சாரத்திற்கு பெயர் போன இந்தியாவில், திருமணங்களின் வரலாறு பற்றி தெளிவாக அறிய முடிய வில்லை. பெற்றோர்கள் தனது மகளின் திருமண நாளை அறிவித்து, பல வரன்கள் வந்த பிறகு, பெண்ணோ அல்லது பெற்றோரோ மணமகனை தேர்ந்து எடுக்கும் "சுயம்வரம்" இப்போது உள்ள "அரேஞ்சுடு" திருமணங்களுக்கு முன் மாதிரியாக உள்ளது. ராமாயணத்தில் ராமர் சீதையை திருமணம் செய்தது இவ்வகையில் தான். 

அதற்காக இதிகாசங்களில் காதல் திருமணங்கள் இல்லை என்று ஆகி விடாது. பெற்றோருக்கும் ஊராருக்கும் தெரியாமல் மணமக்கள் மட்டும் திருமணம் செய்து கொள்வதை "கந்தர்வ விவாகம்" என்று விளக்கம் உள்ளது. துஷ்யந்தன் - சகுந்தலை என இருவர் இவ்வகை திருமணம் புரிந்ததாக கதைகள் உள்ளன.

மேலும், அசுர திருமணம், ராட்ஷஷ திருமணம் மற்றும் பைசாச திருமணம் என்கிற மூன்று வகை திருமணங்கள் மணப்பெண்ணின் விருப்பம் இல்லாமல் நடப்பவை என்றும் குறிப்பிட பட்டுள்ளது. ஆனால், எந்த வகை திருமணத்திலும் மணமகனுக்கு விருப்பம் இல்லாமல் நடைபெற வழி இல்லை.

திருமணத்தின் வகைகளில் இதிகாச காலத்திற்கும் இன்றைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை; மாறி இருப்பது மனங்கள் மற்றும் விஞ்ஞான சாதனங்கள் மட்டுமே; 

உண்மையில் இந்த பத்து வருடங்களில், நடந்த மாற்றம் என்னவென்றால், பெண்கள் கல்வி அறிவு பெற்றதும், கொஞ்சமாவது உரிமை பெற்றதும் மட்டுமே. சங்க காலங்களில் இருந்து, பெண்கள் ஆண்களின் தயவில் வாழ வேண்டும் என்று எழுத படாத விதி இருந்தது. அதனால், அவர்கள் யாரை மணம் புரிய வேண்டும் என்பதை அவர்களது தந்தை முடிவு செய்வார். மணம் முடிந்த பின்னர், பெண்கள் கணவர் என்ன சொன்னாலும் கீழ்ப்படிந்தால் மட்டுமே வாழ்க்கை என்ற நிலை இருந்தது. முந்தைய தலைமுறையினர் விவாகரத்து செய்யாமல் தான் வாழ்ந்தனர் என்றாலும் விரும்பிய படி வாழ்ந்தார்களா என்பது விடை அறியா கேள்வியே. 

கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும், டெல்லியில் விவாகரத்து விகிதம் ஒன்பது மடங்கு அதிகரித்து உள்ளதாக ஒரு அறிக்கை உள்ளது. கொல்கத்தா மற்றும் சென்னையில் இரண்டு மடங்கு விவாகரத்து விகிதம் அதிகரித்து உள்ளதாகவும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது. விவாகரத்து விகிதம் அதிகரிப்பதற்கு காரணமாக நகர மயமாக்கல் மற்றும் விழிப்பு உணர்வு அதிகரித்ததும் கூறப்படுகிறது.

எனவே, தற்போதைய நிலையில், திருமணம் என்பது பெற்றோர்களுக்கும் மணமக்களும் பிடித்து செய்ய வேண்டிய ஒன்றாகிறது. "பணம் பார்த்து, மதம் பார்த்து, இனம் பார்த்து, மனம் பார்த்து வர வேண்டும் காதல்" என்ற வரிகளின் படி, காதலர்கள் தங்கள் பெற்றோருக்கும் பிடிக்கின்ற படி காதல் செய்வதும், பிள்ளைகள் காதல் செய்வதை ஏற்று கொள்ளும் பெற்றோரும் அமைந்தால் மட்டுமே வாழ்க்கை நிம்மதியாக அமையும். அப்படி இல்லா விட்டால், வாரத்துக்கு ஒரு பார்த்தசாரதியும், அனந்த ராமன்களையும் நாம் நாளிதழ்களில் சந்திப்போம்.

சனி, 11 ஜூன், 2011

Birthdays

        இன்று என் நண்பர் ஒருவருக்கு பிறந்த நாள். காந்திஜி, நேருஜி போல நமது பிறந்த நாட்களுக்கு தேசம் முழுவதும் விடுமுறை அளித்து கொண்டாட மாட்டார்கள் என்பதால் நண்பர்கள் மட்டுமாவது விடுமுறை எடுத்து கொண்டு வீட்டில் பிறந்த நாள் கொண்டாட முடிவு செய்ய பட்டது. கேக் வெட்டி, வீடு முழுவதும் மேகம் போல ஸ்பிரே அடித்து, பலூன்கள் உடைத்து, கிப்ட்கள் கொடுத்து, அனைவரும் உச்ச ஸ்தாயியில் "Happy Birthday to You" என குரூப் சிங்கர்களை போல பாடி சம்பிரதாயாமான முறையில் பிறந்த நாள் கொண்டாட தேவையான பொருட்கள் வாங்கியாயிற்று.

     அப்போது பிறந்த நாள் விழாக்களின் வரலாறு பற்றி அறிய ஆவல் வந்ததால், திறந்து இருந்த லைப்ரரிக்கள், கூகிள், பிங்,எதிர் வீட்டு தாத்தா என எல்லா வித செர்ச்களிலும் தேடினேன். 
  
      விக்கிபீடியாவின் விளக்கப்படி, "பிறந்த தேதி" என்பது ஒருவர் எந்த தேதியில் தனது பிறந்த நாளை கொண்டாகிராரோ, அந்த தேதி. இந்த விளக்கம் பற்றி நிறைய யோசித்தால் "Brain Edema" என்னும் வியாதி போல மூளை வீங்கி விடும் என்பதால் விட்டு விடலாம். பிறந்த நாள் கொண்டாட்டங்கள் பிடிக்கிறதோ இல்லையோ, உங்கள் பிறந்த நாளை தெரிந்தும், பிறப்பு சான்றிதழில் பதிந்தும் நிச்சயமாய் வைத்து இருக்க வேண்டும்.

  ஏனென்றால், இந்தியாவை பொறுத்த வரை பிறந்த நாள் வைத்து வயது கணக்கிடுவது, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, டிரைவிங் லைசென்ஸ் வாங்க, ஓட்டு போட, திருமணம் செய்ய, சில மாநிலங்களில் மது அருந்த, கற்பழிக்க (சாதாரண ரேப் குற்றம்; மைனர் பெண்ணை ரேப் செய்தல் மகா குற்றம்; தொடர்ச்சியாக எத்தனை வருடம் களி திங்க உடம்பில் வலு உள்ளதோ, அதற்க்கு ஏற்றவாறு முயற்சிக்கவும்;) தேவை படுகிறது.மேலும், முதல் பத்தியில் பார்த்தது போல, காந்திஜி, நேருஜி, அம்பேத்கர் போன்றவர்களின் பிறந்த நாட்களால் நமக்கு விடுமுறை கிடைக்கும்.

      சட்ட ரீதியானது தவிர, சமய ரீதியாகவும் பிறந்த நாள் முக்கிய அம்சமாக இருக்கிறது. இந்து மதத்தை சேர்ந்த பிராமணர்களுக்கு பூணுல் அணிவிக்க வயது கணக்கிட படுகிறது. கிறிஸ்தவ மதம் பிறந்த நாட்கள் கொண்டாடுவதில் முன்னோடி மதம். இம்மதத்தில் இருந்து தான் பிறந்த நாள் கொண்டாடும் பழக்கம் வந்ததாக சில அறிக்கைகள் உள்ளன. பிறந்த நாள் அன்று ஒருவரை துஷ்ட ஆவிகள் தேடி வரும்; அவரை மற்றவர்கள் சுற்றி நின்று கை தட்டி ஓசை எழுப்பினால் அவைகள் பயந்து அவரை விட்டு ஓடி விடும் என்கிற நம்பிக்கையில் பிறந்த நாள் கொண்டாடும் நபரை சுற்றி மற்றவர்கள் கை தட்டி கொண்டாட ஆரம்பித்தனர். மற்ற படி, அப்போது "Happy birthday to you" பாடலோ, கிப்ட்கள் கொடுக்கும் பழக்கமோ இல்லை.

    உலக அளவில், அறியப்பட்ட பழமையான பிறந்த நாள் கொண்டவர், சாட்சாத் இயேசு பெருமான் தான். அவரது பிறப்பை வைத்தே காலத்தினை கி.மு., கி.பி; என பிரித்துள்ளோம் என்பதை நாடறியும். ஆனால், இயேசு கிறிஸ்த்து வின் உண்மையான பிறந்த நாள் குறித்தும் மாறு பட்ட கருத்துக்கள் உள்ளன. பேகன் என்னும் மதத்தில் உள்ள ஒரு முக்கிய நாளை கிறிஸ்துவின் பிறந்த நாளாக மாற்றி விடுமுறை அளித்ததால் பேகன் மதத்தினர் அதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர் என்று டா வின்சி கோடு புத்தகத்தில் ஒரு வரி வருகிறது. (அடடா, நாம் கூட அம்பேத்கர் பிறந்த நாள் விடுமுறை என்று தமிழ் புத்தாண்டை தானம் வார்த்தோமே)

   மேலும், கிரேக்க வரலாற்றில், பிறந்த நாள் கேக்கின் மீது மெழுகுவர்த்தி ஏற்றினால், நமது பிரார்த்தனைகள் வானில் உள்ள கடவுளுக்கு வெளிச்சமாய் தெரியும் என்ற நம்பிக்கை இருந்துள்ளது. அதை நாம் இன்று வரை பின் தொடர்கிறோம்.ஒரு பிறந்த நாள் கொண்டாடும் பழக்கத்திற்கு எவ்வளவு வரலாறு உள்ளது என்று வியப்பாகவே இருக்கிறது.

  ஆதலினால், யாருக்கு பிறந்த நாள் என்றாலும் தயங்காமல் வாழ்த்து சொல்லுங்கள்;  என் நண்பருக்கு மட்டும் அல்ல, இதை படிக்கும் உங்களுக்கும் இன்றோ, அட்வான்சோ, பிலேட்டடோ, பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

புதன், 8 ஜூன், 2011

திருப்பூர் பேருந்து விபத்து

     செய்தி தொலைக்காட்சிகளில் கீழே நிற்காமல் ஓடும் தலைப்பு செய்திகளில் அவ்வப்போது தமிழ்நாட்டில் ------- அருகே விபத்து; ----  பேர் பலி; என பல நாட்கள் பார்த்த போதும், எந்த விதமான உணர்ச்சியும் இல்லாமல் அடுத்த நொடியே இசை சேனல்கள் மாற்றி "ரண்டக்க ரண்டக்க" பார்த்து இருக்கிறேன்; தமிழ்நாட்டில் விபத்து என்பது தினசரி பேப்பரில் எட்டு பக்கத்துகளுக்குள் ஏதாவது ஒரு பக்கத்தில் நிச்சயம் இருக்கும்; அதனால் விபத்து பற்றிய செய்திகளுக்கு முக்கிய துவம் கொடுத்தது இல்லை, நேற்று அந்த பேருந்து தீப்பிடித்து எரிவதை நேரில் பார்க்கும் வரை.



      ஒரு பேருந்து எரிந்து எலும்புக்கூடு ஆக உள்ளதையும், கருகிய உடல்களின் பொருட்காட்சியையும் மேலே உள்ள படங்களில் நீங்கள் பார்க்கிறீர்கள். நேற்று இரவு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஆற்காடு சென்று விட்டு, காஞ்சிபுரம் திரும்பி வரும் வழியில் இந்த பேருந்து அக்னி பிழம்பாக எரிவதையும் உள்ளே எந்த வித ஒப்பாரியும் இல்லாமல் பிணங்கள் எரிவதையும் நேரில் காண்கின்ற துரதிர்ஷ்டம் அமைந்தது.

       விபத்து நடைபெற்ற இடம் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் என்கிற இடத்தில். பொதுவாகவே, ஒரு விபத்து நடந்ததும், போலிசும் தீ அணைப்பு வீரர்களும் தாமதமாக வருவதால் மட்டுமே, இழப்பு அதிகம் ஏற்படுகிறது என்கிற ஒரு வாதம் இருந்து வருகிறது. ஆனால், நேற்று விபத்து நடந்த அடுத்த நிமிடம் தீ அணைப்பு வாகனம் வந்து இருந்தால் கூட இறந்தவர்களில்  ஒருவரையாவது காப்பற்றி இருக்கலாமா என்பது சந்தேகமே! ஏனெனில், முழுவதும் எரிபொருள் நிரப்பப்பட்ட ஒரு விமானம் அணு ஆயுதத்திற்கு சமமானது என்பதை ஒசாமா அமெரிக்காவில் நிருபித்து காட்டியுள்ளார்;  அதே போல இந்த விபத்திலும் எரிபொருள் டாங்கி வெடித்ததால் மட்டுமே இந்த அளவுக்கு உயிர்கள் பலி வாங்க பட்டு உள்ளன;

         இந்த பேருந்து சென்னை யில் இருந்து திருப்பூர் செல்லும் தனியார் Travels பேருந்து. விபத்து நடந்த இடத்திற்கு அருகே வரும் போது முன்னால் சென்ற இரண்டு லாரிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதாகவும், அந்த லாரிகளின் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பிய போது, கட்டுப்பாடு இழந்த பஸ், பள்ளத்தில் பாய்ந்து, டீசல் டாங்கி வெடித்ததாக, சரணடைந்த பேருந்து ஓட்டுனர் தெரிவித்துள்ளார்.

          இந்தியாவில் வாகன விபத்துகளுக்கு காரணமாக வண்டிகள் பராமரிக்க படாமல் இருப்பதையும், ஓட்டுனர்களின் அலட்சிய போக்கும் தான் என்று கருத படுகிறது. இவை இரண்டுமே இந்த விபத்துக்கு காரணமாக இல்லை என்றே படுகிறது. வார இறுதி நாட்களிலும், விடுமுறை காலங்களிலும் சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செல்ல பேருந்துகளில் இடம் கிடைக்காது. அவ்வளவு ஜன நெரிசல் இருக்கும். ஆனால் வார வேலை நாட்களில், பேருந்துகளில் கூட்டம் எதுவும் இருக்காது. எனவே, ஆட்கள் சேரும் வரை பஸ் ஸ்டாண்டில் நின்று, போதுமான அளவு ஆட்கள் ஏறிய பிறகே வண்டிகள் புறப்படுகின்றன. பஸ் ஸ்டாண்டில் நின்ற நேரத்தினை ஈடு செய்ய அதிக வேகத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நேற்று எரிந்து, டீசலுக்கு பதிலாக 23 பேர்களின் உயிர் குடித்த பேருந்தும் இதே போல் தான் நின்று, ஆட்கள் சேர்த்து கொண்டு, வேகமாக சென்றுள்ளது.

             தனியார் பேருந்து நிறுவனங்கள், பயணிகளிடம் இருந்து பணம் மட்டுமே பார்க்காமல், கொஞ்சம் பயணிகளின் பாதுகாப்பையும் கவனிக்க வேண்டும். வேகமாக சென்று பிணமாக போவதை விட, கொஞ்சம் நிதானம் ஆனாலும் உயிரோடு செல்வதே உத்தமம். 

           மேற்படி விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்க படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது; அதே போல அதிவேகத்தில் செல்லும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுத்தாலும் பாராட்டத் தக்கதே. இவ்வாறு நாம் யோசிக்க, உயிர் தியாகம் செய்த பெயர் தெரியாத அந்த 23 பேரின் ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திப்போம். 
           

திங்கள், 6 ஜூன், 2011

Baba Raamdev - Hero or Comedian?

பாபா ராம்தேவ்


          போட்டோ ஷாப் உதவியோடு கைகளுக்கு இடையில் சூரியனை எழுப்பும் இந்த காவி துறவியை இதற்கு முன்னால் ஸ்டார் டிவியிலும் சஹாரா டிவியிலும் யோகா நிகழ்ச்சிகள் நடத்தும் போது பார்த்து இருப்பீர்கள்.இந்த ஆன்மிக துறவிகளின் திருநாமம் ராம் கிருஷ்ணா யாதவ்; இப்போது அப்படி சொன்னால் சுவாமிகளின் சீடர்கள் வருத்தப்பட கூடும். எனவே, தற்போது அனைவரும் இவரை அழைக்கும் படி பாபா ராம்தேவ் என்னும் பெயரிலேயே நாமும் குறிப்பிடலாம். இப்படி ஒருவர் இருக்கிறாரா? என்று கேட்கும் இனிய அன்பர்கள், இந்த கட்டுரையை படிக்காமல், 8 வது தொகுதியாக நடக்கும் மானாட மயிலாட நிகழ்ச்சியில் குஷ்பூவுக்கும் நமீதாவுக்கும் இடையில் நாலாவது நடுவராக போகலாம், தவறில்லை.

          நாடு முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் நடத்தி பிரபலம் ஆன நிதான வேகம், சுவாமிகளுக்கு பிடிக்க வில்லையா என தெரிய வில்லை. ஒரே வாரத்தில் அடித்த பப்ளிசிட்டி ச்டன்ட்டுகளினால் கூகுள் இணைய தளத்தில் அதிக நபர்களால் தேடப்பட்ட பெருமையை பெற்றுள்ளார். காந்தியவாதி திரு. அன்னா ஹசாரே அவர்கள் ஊழலுக்கு எதிராக போராடி உண்ணா விரதம் இருந்த பார்முலா வெற்றி அடைந்து இருந்ததால், அதிக ரிஸ்க் இல்லாமல் அதே பார்முலாவை பின்பற்றி உண்ணா விரதம் அறிவித்தார்.

                  பாபா ராம்தேவ் அவர்கள் மத்திய அரசிடம் கீழ்க்கண்டவாறு கோரிக்கைகளை தெரிவித்து, நிறைவேற்றா பட விட்டால், உண்ணா விரதம் இருக்க போவதாக அறிவித்தார்.

1 ) இந்தியர்களிடம் இருந்து கைப்பற்ற படும் கருப்பு பணத்தினை இந்திய அரசாங்கத்தின் சொத்தாக அறிவிக்க பட வேண்டும்;

2 ) சுவிட்சர்லாண்டு வங்கிகளில் பணம் பதுக்குவதை தேசிய துரோகமாக அறிவிக்க வேண்டும்;

3 ) ஊழல் குற்றம் புரிந்து குற்றம் நிருபிக்க பட்டால், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்க பட வேண்டும்;

4 )லோக்பால் சட்டம் இயற்றப்பட வேண்டும்;

5 )மாநிலங்களில் பாஸ்ட் புட், ச்சே, பாஸ்ட் கோர்ட்கள் அமைக்க பட வேண்டும், குறிப்பாக ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்;

6 ) 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழித்து விட வேண்டும்;

7 )பொறியியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட படிப்புகளை பாரதீய மொழிகளில் கற்பிக்க பட வேண்டும்;

8 )பிரதமரை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும்;

9 )எந்த ஒரு தனி மனிதனுக்கும் அவன் குறிப்பிட்ட சேவைகளை செய்ய தவறிய அரசு அதிகாரி அந்த நபருக்கு நஷ்ட ஈடாக பணம் தர வேண்டும்;

10)வெள்ளைக்காரர்கள் அறிமுக படுத்திய நில கையப்படுத்தும் சட்டம் ரத்து செய்ய பட வேண்டும்;

        கோரிக்கைகளை படிக்கும் போது, பாபா ராம் தேவ் ஒரு காவி உடை அணிந்த 'முதல்வன்' அர்ஜுன் போலவே தெரிந்தார். இந்த கோரிக்கைகளில் பெரும்பான்மையானவைகள் ஏற்று கொள்ள பட்டது, மற்றவைகளின் மீது விவாதம் தேவை என மத்திய அரசு சார்பில் திரு.கபில் சிபல் தெரிவித்து பாபா உண்ணாவிரதத்தை விலக்கி கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார். இந்த இடைவேளை காட்சிக்கு பிறகு, ஹீரோ வாக இருந்த பாபா காமெடி செய்ய ஆரம்பித்துள்ளார்.

         மத்திய அரசின் பேச்சு வார்த்தைக்கு பிறகு, உண்ணா விரதத்தை விலக்கி கொள்வதாக பாபா கையெழுத்து இட்டு கடிதம் அளித்தார். பிறகு, இடையில் நடந்த மாற்றத்தினால், திடீரென தாம் ஏமாற்ற படுவதாக பேட்டி அளித்தார்; டெல்லி ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்த போது, பாபா அந்த மைதானத்தில் யோகா நிகழ்ச்சிகள் நடத்த போவதாக மட்டுமே அனுமதி வாங்கி இருந்தது தெரிய வந்தது.  தான் மட்டும் தனியாக இல்லாமல், துணைக்கு 30,000 தொண்டர்களுடன் உண்ணாவிரதம் ஆரம்பித்தார், பாபா.

     அதிகாலை 01 .30 மணிக்கு, அனைவரும் உறக்கத்தில் இருந்த போது, ராம் தேவை கைது செய்ய போலீஸ் வந்தது. "பில்டிங் strongu, பேஸ்மென்ட் வீக்கு" என்று வடிவேல் சமாளிப்பது போல, "போலீஸ், போலீஸ்" என்று கத்தாமல் " மைக்கில் "வந்தே மாதரம், வந்தே மாதரம்" என்று கத்தி தொண்டர்களை எழுப்பினார்.  அதையும் தாண்டி போலீஸ் அருகே வந்ததும் பொருட்களை எடுத்துக் கொள்ள ஐந்து நிமிடம் அவகாசம் கேட்டு விட்டு, திடீரென 15 அடி உயர மேடையிலிருந்து குதித்து (நம்ம போலீஸ் மக்களுக்கு இருக்குற தொப்பைக்கு அவ்ளோ தூரம் குதிக்க முடியாது தான், எல்லோருக்கும் இந்த பாபாவை வைத்து யோகா சொல்லி தர கேட்கலாம்.) பெண் பக்தைகளுக்கு மத்தியில் ஒளிந்து கொண்டார். ஒரு வழியாக கண்ணா மூச்சி விளையாட்டு முடிந்து, சுடிதார் உடையில் ஒளிந்து இருந்த பாபா கைது செய்ய பட்டு, ராம் லீலா மைதானத்தில் இருந்து வெளியேற்ற பட்டார்.

"எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் " என்ற பஞ்ச் டயலாக்கோடு காமெடி நிறைவு அடைந்ததாக கருதலாம். பாபா ராம் தேவும் தான் விரும்பிய பப்ளிசிட்டி அடைந்ததற்கு பெருமை கொள்ளலாம். இவராலாவது ஏதாவது மாற்றம் வருமா என்று விரும்பிய மக்கள் மட்டும் அன்னா ஹசாரே - பார்ட் 2 வரும் வரைக்கும் காத்திருக்கவும்.

புதன், 1 ஜூன், 2011

Right to Information Act - A glance

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005

                       இந்தியாவில் 2005 ம் ஆண்டு வரை சாதாரண குடிமக்களுக்கு இருந்த அதிக பட்ச உரிமை அல்லது சக்தி என்பது வாக்குரிமையாக இருந்தது. வாக்கு உரிமையின் மூலம் தங்களை ஆள்பவர்களை தேர்ந்து எடுக்க முடியும் என்றாலும், அதன் மூலம் உடனடி பிரச்சனைகளை தீர்க்க முடியாது. அது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பணம், பிரியாணி, குவார்டர் மட்டுமே பெற பயன் படும். அதிக பட்சமாக தேர்தல் சமயத்தில் சாலைகள் சரி செய்ய படலாம், மின் தடை இல்லாமல் இருக்கலாம், குடி நீர் கூட தினம் வரலாம். ஆனால், இந்த அதிக பட்சங்கள் நீங்கள் வாக்கு சாவடியில் பொத்தானை அழுத்தியதும், "வரங்களை அளித்து விட்ட பூதம்" போல விளக்கிற்குள் ஒளிந்து விடும் என்பதை நாடே அறியும். தேர்தல் பிரச்சாரத்திற்கு நடிக, நடிகைகள், அரசியலில் உள்ள அனைவரும் உங்கள் வீடு தேடி வருவார்கள். அவர்களை சுற்றி வந்து சேவித்து கொள்ளலாம், மறுபடி அவர்களது கால்ஷீட் ஐந்து வருடங்களுக்கு பிறகு தான் கிடைக்கும். தேர்தல் என்பது திருவிழாவாகவும், பொழுது போக்கு அம்சமாகவும் ஆன பிறகு, அதை பற்றி இவ்வளவு தூரம் எழுத வேண்டியதற்கு காரணம், வாக்கு உரிமையை விட அதிக சக்தியை சாதாரண குடிமகனுக்கு, தகவல் அறியும் உரிமை சட்டம் அளித்துள்ளதை படம் வரைந்து பாகம் குறிக்கவே.

             தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI - Right to information Act) என்பது பத்திரிகை சுதந்திரத்தில் இருந்து ________ (derived க்கு சரியான தமிழ் வார்த்தை போட்டு கொள்ளவும்) பெற்றது. ஒரு பத்திரிகை எல்லா செய்திகளையும் வெளியிட உரிமை உள்ளது என்றால் எல்லா இந்தியர்களும் எல்லா செய்திகளையும் தெரிந்து கொள்ள உரிமை உள்ளவர்கள் ஆகிறார்கள். தர்க்க ரீதியாக ( logical point of view இல்) இது சரி என்றாலும், பெரும்பாலான விஷயங்கள் ஒளிவு மறைவு இல்லாமல் நடப்பது இல்லை. எனவே, தகவல் அறியும் உரிமை ஒரு சட்டமாக இயற்ற பட்டது. இந்த சட்டத்தை பற்றிய புத்தகங்கள், கையேடுகள் தான் தற்போது அதிக அளவில் விற்பனை ஆகி வருகிறது. சட்ட புத்தங்களில் உள்ள படியே டைப் செய்தால், நீங்கள் இனி இந்த ப்ளாக் பக்கம் எட்டி கூட பார்க்க மாட்டீர்கள் என்பதால் முடிந்த வரை சிம்பிளாக எழுத முயற்சிக்கிறேன்.

                   இந்த சட்ட படி, தகவல் என்பது அரசு அலுவகங்களில் பாதுகாக்க பட்டு வரும் எல்லா ஆவணங்களையும் குறிக்கும். இந்திய குடிமகனாக உள்ள யார் வேண்டுமானாலும் எந்த அரசு அலுவலத்திலும், தனக்கு வேண்டிய அரசு சார்ந்த விசயங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு எந்த ஆபிசில் எந்த விவரம் வேண்டுமோ அதை பற்றி ஒரு பேப்பரில் எழுதி, பத்து ரூபாய் கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பினால் போதும்,30 நாட்களுக்குள் நீங்கள் கேட்ட விவரம் உங்கள் வீடு தேடி வரும். நீங்கள் ஏன் இந்த விவரங்களை கேட்கிறீர்கள் என்றெல்லாம் சொல்ல வேண்டியது இல்லை. இது இந்த சட்டத்தின் சாராம்சம்.

                 RTI க்கு அரசு அதிகாரிகள் முக்கிய துவம் கொடுப்பார்கள். ஏனெனில் 30 நாட்களுக்குள் மனுதாரர் கேட்ட விவரம் அளிக்கப்படா விட்டால், அதிக பட்சமாக 25,000/- அபராதம் விதிக்க படலாம். ஒரு அலுவலத்துக்கு RTI விண்ணப்பம் ஒன்று வந்து விட்டால், அனைவருமாக சேர்ந்தாவது அந்த விண்ணப்பத்துக்கு பதில் அனுப்பி விட்டு தான் அடுத்த வேலை செய்கிறார்கள். சட்டம் இயற்ற பட்ட நாள் முதல் நீங்கள் இதை படித்து கொண்டிருக்கும் இந்த நேரம் வரை லட்ச கணக்கான மக்களின் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் அளித்து இருக்கிறார்கள்.

       எல்லாம் சரி, இவ்வளவு பெரிய சக்தியை பொது மக்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.  அப்படியானால், இந்தியாவில், சங்கர் படங்களில் வருகிற கிளைமாக்ஸ் காட்சி போல ஒளிவு மறைவு அற்ற நல்லாட்சி வந்து விடுமா என்றால் அப்படியெல்லாம் ஒன்றும் பெரிய மாற்றம் இல்லை என்றே தெரிகிறது. ஏனெனில், மக்கள் பொது நலத்துக்காக எந்த ஒரு விவரமும் கேட்பதில்லை. தங்கள் சொந்த பிரச்சினைகளை தீர்த்து கொள்ள உதவும் ஒரு கருவியாக மட்டுமே RTI ஐ பயன்படுத்துகிறார்கள். இந்த சட்டத்தில் அதிமாக கேட்க படும் கேள்வி என்ன என்றால் " நான் கொடுத்த மனு என்ன ஆச்சு?" என்பது தான். இதில் கேள்வி கேட்ட காரணத்திற்காகவே அவர் கொடுத்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க படுகிறது.

        இரு தனி நபர்களிடையே பிரச்சனை என்றால், ஒருவர் அடுத்தவர் மீது புகார் கூறி ஒரு மனு, பின்னாலேயே RTI ல் ஒரு மனு. இப்படி தனக்கு அருகில் உள்ளவர்களை மிரட்ட சிலர் இதை ஆயுதமாக வைக்க பழகி உள்ளனர். இன்னொரு பிரகஸ்பதி, 73 பெயர்களில் ஒரு அலுவலத்துக்கு தொடர்ச்சியாக ஸ்ரீராமஜெயம் எழுதுவது போல RTI இல் கேள்வி மேல் கேள்விகள் கேட்டுள்ளார். பதில் அளித்து பதில் அளித்து சோர்ந்து போன அதிகாரிகள் போலீசில் புகார் செய்ய, அந்த பிரகஸ்பதி, பணம் வாங்கி கொண்டு இவ்வாறு செயல் பட்டது தெரிய வந்துள்ளது.  இது இந்த சட்டம் தெரிந்து, தவறாக பயன்படுத்துபவர்கள்.
                           
     சில அப்பாவிகள், எந்த கேள்வி கேட்டாலும் பதில் வரும் என்கிற நினைப்பில், கரகாட்ட காரன் திரைப்படத்தில் செந்தில் கேட்பது போல " நடிகை சொப்பன சுந்தரி வச்சு இருந்த காரை நாம வச்சு இருக்கோம், காரை வச்சு இருந்த சொப்பன சுந்தரியை இப்ப யார் வச்சு இருக்காங்க"னு கேட்க நினைகிறார்கள். மேற்படி விஷயம் குறித்து எந்த அரசு அலுவலத்திலும் பைல் வைத்து இருக்க மாட்டார்கள்.

            முடிவாக, இந்த RTI சட்டம் என்பது ஒரு பிரம்மாஸ்திரம். நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளவர்கள் மீது இதை பிரயோக படுத்துங்கள், பல் குத்தும் குச்சியாக பயன் படுத்தாதீர்கள்.