tag Guru Paarvaigal

செவ்வாய், 19 ஜூலை, 2011

இரத்தமும் தானமும் 

இரத்தம், உடம்புக்குள் பாயிண்ட் டு பாயிண்ட் ஓடும் ஒரு திரவ பஸ். உடம்பு செல்களுக்கு தேவையான சத்து மற்றும் ஆக்சிஜனை சுமந்து சென்று சேர்த்து விட்டு அங்கே வெளியேற தயாராக இருக்கும் கார்பன் டை ஆக்சைடை ஏற்றி கொண்டு செல்லும் ஒரு சிவப்பு பஸ். இந்த பஸ் ஒரு மனித உடலுக்குள் 5 - 6 லிட்டர் இருக்க வேண்டும். அளவு குறையும் போது பண்டிகை நேரத்து கோயம்பேடு பஸ் நிலையம் பயணிகள் கூட்டத்தால் திணறுவது போல உடல் திணறி, அந்த உடலுக்கு சொந்தகாரர் அடுத்த நாள் பத்திரிக்கைகளில் கண்ணீர் அஞ்சலிக்கு கீழே புகைப்படமாக இடம்பெறுகிறார்.
 
அவ்வாறு ஒருவருக்கு விபத்து மூலமாகவோ, அல்லது அறுவை சிகிச்சையின் போதோ, இரத்தம் அதிகமாக வெளியேற்ற படும் போது, அதே இரத்த வகையை கொண்ட மாற்று நபர்களிடம் இருந்து கடன் பெற்று மாற்று பேருந்து விடலாம்.

சென்ற வாரம் ஒருவரின் அறுவை சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவ மனையில் இரத்த தானம் செய்து விட்டு வந்தேன். அடியேனின் ரத்த வகையான "ஏ1" நெகடிவ் என்பது ஆறாவது விரல் போல கொஞ்சம் அரிதானது; எனவே, "friendstosupport.org" என்னும் இணையதளத்தில் எனது விவரங்களை பதிவு செய்து உள்ளேன்; இந்தியாவில் எல்லா மாநிலத்தில் உள்ள தன்னார்வ இரத்த நன்கொடையாளர்களும் இந்த தளத்தில் பதிவு செய்து உள்ளதால் இரத்தம் தேவை படுபவர்கள் இந்த தளத்தில் தங்களுக்கு அருகாமையில் உள்ள டோனோர்ஸ் யை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
 
அவ்வையார் இன்றைக்கு இருந்து இருந்தால் "தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம்" என்று பாடி இருக்க கூடும். இந்தியாவில் தன்னார்வ நன்கொடையாளர்கள் அதிகரித்து வந்தாலும், இரத்த தானம் செய்ய தயங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது.
 
இரத்த தானம் செய்யாத பலர் கூறும் முதல் வாக்கியம் " எனக்கு அதை பார்த்தாலே மயக்கம் வந்துடும்" என்பதே. அதற்க்கு காரணம் முதல் முறை தானம் செய்யும் போது ஏற்படும் பதற்றமே. என்னுடைய முதல் இரத்த தானம் விருப்ப பட்டு நடந்தது அன்று; 18 வயதில் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் வற்புறுத்தி வெறும் 48 கிலோ எடை இருந்த என்னை இரத்த தான முகாமில் தானம் செய்ய சொன்னார்; இரத்தம் எடுக்க படும் போது அருகே ஒரு அழகான (?)  மாணவி நின்று கொண்டு, என்னிடம் பேசி கொண்டு இருந்ததால் பயத்தை வெளி காட்ட முடியாமல் தவித்தது இன்றும் நினைவில் உள்ளது. கையில் இருந்து ஊசியை எடுத்து, இரத்த தானம் அவ்வளவு தான் என்று தெரிவித்த பிறகு தான் அது எளிதான ஒன்று என்பது தெரிந்தது. 

 இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் முதல் முறை தானம் செய்யும் போது பதட்டம் அடையாமல் மனதினை கட்டு படுத்துங்கள்; அதற்காக அழகான பெண் அருகில் இருக்க வேண்டும் என்று கேட்காதீர்கள்;

அதன் பின்னர், அடையார் கான்செர் இன்சிடியுட்டில் volunteer ஆக சேர்ந்து நம்மாளும் சிலருக்கு பயன் அளிக்க முடியும் என்று தெரிந்ததில் இருந்து, சென்ற வாரம் வரை கிட்ட தட்ட கால் சதம் இரத்த தானம் செய்தாகி விட்டது. 

அதே போல நெகடிவ் இரத்த வகை கொண்ட நபர்கள் பொதுவாக முகாம்களுக்கு சென்று தானம் செய்வதை தவிர்ப்பது நன்று. அதை விட, அவசர சிகிச்சைகளுக்கு தேவை படும் போது நேரில் சென்று வழங்கி வரலாம்.

மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தி துவங்கி கடைசியில் நான் வரைக்கும் இரத்த தானம் பற்றி பேசியாகி விட்டது. இந்தியாவில் இரத்த இழப்பின் காரணமாக யாருமே இறக்க வில்லை என்ற நிலை வந்திட, "செல்வோமா, சென்னை சில்க்ஸ்" என்று அனுஷ்கா கேட்பது போல, நம்மை நாமே கேட்கலாம் "செய்வோமா, இரத்த தானம்?"

வெள்ளி, 24 ஜூன், 2011

Death Sentences


மனதை திடப்படுத்தி கொள்ளுங்கள். இந்த பதிவில் தொடர இருப்பவை நிறைய மரணங்கள்; கொல்லும் வழிகள்; நிறைய வலிகள்.அதற்காக இளகிய மனம் படைத்தவர்கள் இதை படிக்க வேண்டாம் என்றெல்லாம் ஒதுங்கி விட வேண்டாம். கொலைகளை ரத்தமும் சதையுமாக நாம் பார்க்க போவதில்லை; தியேட்டரில் பேய் படம் பார்ப்பதை போல ஒரு கண்ணை மூடி கொண்டு, கொலைகளுக்கான காரணங்கள் மற்றும் சில சரித்திர குறிப்புகளும், ஆராய்ச்சிகளையும் மட்டுமே மற்றொரு கண்ணால் பார்க்கலாம்.

மனித இனம் தோன்றிய உடனே அரங்கேற்ற பட்டவை, கொலைகள். குரங்கிற்கு அடுத்த உயரிய உயிரனமாக தோன்றியது நமது மனித இனமும், நியாண்டர்தால் மனித இனமும்; நியாண்டர்தால் இனத்தினை முழுவதுமாக கொன்று அழித்த பின்னர் தான் மனித இனம் வளர்ந்தது என்பது வரலாறு. அது வரை விலங்குளை விலங்குகள் வேட்டையாடியது முடிந்து கொலை என்கிற வார்த்தை கண்டு பிடிக்க பட்டது.

கொலையால் வளர்ந்த இனம் என்பதாலோ என்னவோ, மனித மனங்களுக்குள் கொடூரமான கொலை எண்ணங்கள் உள்ளன.

 ஒரு ஆய்வில் கண்ணாடி தடுப்புக்கு ஒருபுறம் தேர்ந்த நடிகர்கள் நிறுத்தப்பட்டு அவர்களின் தலையில் இரும்பு கவசம் பொறுத்த பட்டது. மறுபுறம் ஆய்வுக்கு வந்தவர்களின் கைகளில் கரண்ட் ஷாக் கொடுக்கும் கருவி வழங்க பட்டது. ஆய்வுக்கு வந்தவர்கள் நடிகர்களிடம் கேள்விகள் கேட்க வேண்டும். தவறாக விடை சொன்னால், அவர்களுக்கு கரண்ட் ஷாக் கொடுக்கலாம் என்று தெரிவிக்க பட்டது. உண்மையில் அங்கே கரண்ட் எதுவும் இணைக்க பட வில்லை. ஆய்வுக்கு வந்தவர்கள் கொடுக்க நினைக்கும் கரண்ட் அளவு நடிகர்களுக்கு தெரிவிக்க பட, அதற்க்கு ஏற்றார் போல் அவர்கள் வலியில் துடிப்பது போல நடிப்பார்கள். ஆய்வின் போது முதலில் மிக குறைவான அளவில் ஆரம்பித்து, நடிகர்கள் கரண்ட் ஷாக் அடிப்பதை போல நடிப்பதை பார்த்ததும் வெறியேறி மிக மிக அதிக அளவில் கரண்ட் ஷாக் கொடுத்துள்ளனர் ஆய்வுக்கு வந்த சாதாரண மக்கள். ஆய்வின் முடிவு என்ன என்றால், தங்களுக்கு தீங்கு ஏதும் நேராது என்றால், யாரை வேண்டுமானாலும் கொலை செய்ய மனிதர்கள் தயங்குவது இல்லை என்பதே.

"எனக்கு வரும் கனவுகளில், சமயங்களில் பெண்கள் வருகிறார்கள்; என்னை கிளர்ச்சியுற செய்கிறார்கள்;சில கனவுகளில் சிலர் என்னை தாக்க வருகிறார்கள், நான் அவர்களுடன் வன்முறையாக சண்டை போடுகிறேன்; பாதி கனவிலேயே நான் யார் என்பதை உணர்ந்து அவைகளை கை விடுகிறேன்" - இப்படி சொல்லி இருப்பவர் சாட்சாத் தலாய் லாமா. அவர் யார் என்று கேட்பவர்களை திபெத்தில் லாட்டரி விற்க வைக்கலாம். அப்பேர் பட்ட துறவிக்கே காம, குரோத எண்ணங்கள் வந்தால் சாதாரண மனிதனுக்கு எவ்வளவு வரும்? அதிகாரமும், பலமும் கொண்ட மன்னர்களுக்கு கொலை உணர்ச்சி எவ்வளவு இருந்து இருக்கும்?

மன்னராட்சி இருந்த காலங்களில் ராஜ துரோகங்களுக்கு மரண தண்டனை விதிக்க பட்டது. முதன் முதல் மரண தண்டனை விதித்த மன்னர் யார் என்று எங்கே தேடியும் தெரிய வில்லை.

இதிகாசங்களில் ராமாயண, மகாபாரத்தில் போர்கள் நடந்ததாகவும், பல்லாயிரக் கணக்கில் உயிர்கள் கொல்ல பட்டதாகவும் வருகிறது. முறையாக வாகனம் ஓட்டாததால்  ( drunk & driving ah என்று தெரிய வில்லை), மகனுக்கு மரண தண்டனை வழங்கிய மனுநீதி சோழன் பற்றிய வரலாறு பள்ளியிலேயே படித்து இருக்கிறோம்.

இந்திய அரசர்களை பொறுத்த வரை, ராஜ துரோகம் மற்றும் கடவுளை பழிப்பவர்களை மட்டும் கழுவிலேற்றி கொல்லும் வழக்கம் இருந்துள்ளது. மற்ற படி, எப்போதாவது நடை பெரும் போர்களில், அவர்களின் வன்முறை உணர்ச்சிக்கு வடிகால் இருந்துள்ளது.

இந்தியாவின் மீது முகாலய பேரரசர்கள் படை எடுத்து வந்த போது தான் கொலைகளின் வகைகள் தெரிய வந்துள்ளது. முகம்மது பின் துக்ளக் என்பவனிடம் சண்டை இட்டு தோற்ற அரசன் உடனே தனது கழுத்தை வெட்டி கொன்று விடுமாறு கெஞ்சி உள்ளான். காரணம் உயிரோடு பிடி பட்டால், அவனது சித்திரவதைகளை தாங்க முடியாது. அந்த அரசனுக்கு கிடைத்த தண்டனையை எழுதவே சற்று தயக்கமாக உள்ளது. தண்டனையை தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் அடுத்த பத்திக்கு சென்று விடவும். சண்டையில் பிடிபட்ட அரசன் உயிரோடு இருக்கும் போதே, அவனது தோல் முழுவதும் உரித்து எடுக்கப்பட்டது. எடுக்க பட்ட தோலுக்குள் வைக்கோல் அடைக்கப்பட்டு அரண்மனை வாசலில் தொங்க விட பட்டது. மேலும் அவனது உடல் கொஞ்சம் கொஞ்சமாக வெட்ட பட்டு, அந்த மாமிசம் அவனது உறவினர்களுக்கு வலுக்கட்டாயமாக வாயில் உணவாக திணிக்கப் பட்டது.

மன்னராட்சியின் முடிவில் ஆங்கிலேயர் வந்தனர். அவர்களின் சட்டத்தில் பழகி போன பழைய தூக்கு மட்டுமே இருந்தது. சுவாரசியமான கொலைகள் என்று அவர்கள் எதுவும் செய்த மாதிரி இல்லை. இந்த சமயத்தில் ஜெர்மனியின் ஹிட்லர் பற்றி ஞாபகம் வரவில்லை என்றால் அவன் செய்த 15-17 மில்லியன் கொலைகளுக்கு மதிப்பே இல்லாமல் பொய் விடும். சின்ன அறைக்குள் வேற்று மதத்தினவர் என்ற ஒரே காரணத்திற்காக அவ்வளவு யூதர்களை அடைத்து, விஷ வாயு அனுப்பி, கூட்டம் கூட்டமாக எம உலகிற்கு டிக்கெட் கிழித்து கொடுத்துள்ளான்.

இந்த கொடூரங்கள் எல்லாவற்றையும் ஏன் எழுத வேண்டி இருக்கிறது என்றால் இலங்கை இராணுவம் செய்த சில கொலைகளை இணையத்தில் பார்த்ததாலேயே.

மிருகத்தில் இருந்து அப்போது தான் தோன்றினோம், ஆதலால் நியாண்டர்தால் மனிதர்கள் கொலை செய்ய பட்டது அறியாமையிலும், அறிவு வளர்ச்சியின்மையாலும் செய்ய பட்டதாகிறது.

அரசர்கள் தங்கள் ராஜ்ஜியத்தை காப்பாற்ற செய்த கொலைகள், பதவி ஆசையில், அறிவிழந்து செய்ய பட்டவைகள் ஆகின்றன;

வேற்று மத துவேசத்தில் கொலைகள் செய்த ஹிட்லர், மீண்டும் ஒரு மிருகமாகவே வரலாற்றில் தெரிகிறான். அந்த நேரத்தில் அறிவியல் முன்னேற்றங்கள் குறிப்பிடும் படி வளர வில்லை. அதனால் மத நம்பிக்கையில் வேருன்றி, அவ்வாறு செய்து விட்டான் என்பதை நாம் சிறிது யோசிக்கலாம்.

ஆனால், எனது அறையில் இருந்து நான் எழுதும் இந்த கட்டுரையை உலகம் முழுவதும் வாசிக்கும் அளவுக்கு அறிவியல் வளர்ந்த பின்னும், பார்க்காத கடவுளுக்காக பாகிஸ்தான் இராணுவம் இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்பி மக்களை கொல்கிறார்கள்; இலங்கை இராணுவமோ சொந்த நாட்டு மக்களையே வேற்று மொழியான தமிழ் பேசும் ஒரே காரணத்திற்க்காக கொன்று குவிக்கிறார்கள்; அவர்கள் இன்னும் விலங்காகவே இருக்கிறார்கள்.

பலத்தால் மட்டுமே நீடித்தது மிருகங்களின் வரலாறு.அன்பால் மட்டுமே நிலைத்து இருப்பதே நாம் மனிதர்களாக வளர்ச்சி அடைந்ததற்கான சான்றாகும்.

வன்முறையை விடுத்து அவர்களும் பரிணாம வளர்ச்சி பெற்று, மனிதர்களாகட்டும். 


சனி, 18 ஜூன், 2011

மனிதன் உருவான விதம் 

சார்லஸ் டார்வினின் "தியரி ஆப் எவலுஷன்" யை சுருக்கமாக விளக்கி விடலாம். உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டவை. "சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட்" (வல்லவன் வாழ்வான்?) என்னும் விதிப்படி, சுற்றுப்புற சூழ்நிலைகளோடு ஒத்து போகாத உயிரினங்கள் அழிந்தன; உயிரினங்கள் சூழ்நிலைகளை சமாளிக்க தேவையான சில மாற்றங்கள் தோன்றின. அந்த மாற்றங்களினால் பல புதிய உயிரினங்கள் தோன்றின. இவ்வாறு தோன்றிய தற்போதைய கடைசி உயிரினம் தான் மனிதன். இந்த தியரியை அடிப்படையாக வைத்து தான் பரிணாமம் பற்றி பெரும்பாலான விளக்கங்கள் உள்ளன.

திடீரென்று, இதை பற்றி எழுத காரணம் நண்பர் ஆரோணன் அவர்கள் பரிணாமம் மெய்யா? பொய்யா? என்னும் தலைப்பில் பல்வேறு மதத்தை சேர்ந்த நண்பர்களின் கருத்துகளை கோரி இருந்தார்; அது குறித்த மொத்த விளக்கங்களையும் எனது பார்வையில் அளிக்கவே.

முதலில் பூமியில் ஒரு செல் உயிரினங்கள் தோன்றி, தற்போது மனிதன் வரைக்குமான பரிணாம வளர்ச்சி அட்டவணையினை விக்கிபிடியாவில் அளித்துள்ளனர்.http://en.wikipedia.org/wiki/Timeline_of_human_evolution என்கிற லிங்கில் அந்த அட்டவணையினை பார்க்கலாம்.

அறிவியல் போதும் என்று நினைக்கிறேன். 

மதங்களின் பார்வையில் மனிதன் தோன்றிய விதம் குறித்த விவரங்கள் சரியானவைகளாக இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. நாம் பார்த்த பரிணாம கோட்பாடுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்க பட்டவை. பெரும்பாலான மதங்கள் கூறிய விவரங்கள் பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்கு முன்னால் தெரிவிக்க பட்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஒரு நான்கு வயது சிறுமி பெற்றோரிடம் "தங்கச்சி பாப்பா எப்படி பிறந்தது?" என்று கேட்டால், சாமி குடுத்துச்சு என்று பொய் சொல்வது போலவே, அந்த நூற்றாண்டுகளில் யாரோ சிலர் "மனிதன் எப்படி உருவானான்?" என்று கேட்டதற்கு பதிலாக சொன்ன கதைகளாக தான் அவை இருக்க வேண்டும் என்று தெரிகிறது.

இந்து மதத்தை பொறுத்த வரை, கடவுள்களிடம் பணி ஒதுக்கீடு உள்ளது. படைத்தல் தொழில் "கடவுள் பிரம்மா"வின் இலாகா. எல்லாவற்றையும் அவர் தான் படைக்கிறார். எனவே மனிதனின் படைப்பு பற்றிய கேள்விக்கு பதிலாக "கடவுள் பிரம்மா" இருக்கிறார். உங்களையும் என்னையும் நமது பெற்றோர்கள் தான் படைத்தார்கள் என்பது அறிவியல்.

பரிணாமம் பற்றிய கேள்விகளுக்கு இந்து மதத்தில் விளக்கங்கள் இல்லை என்றாலும், "கடவுள் மகா விஷ்ணு"வின் பத்து அவதாரங்களில் கொஞ்சம் பரிணாமம் உள்ளது. மச்ச அவதாரம் என்று கடல் வாழ் உயிரனமான மீனில் இருந்து, கூர்மம் (tortoise), வராஹம் (பன்றி), நரசிம்மம்(பாதி சிங்கம், பாதி மனிதன்), வாமணன்(குள்ள மனிதன்), பரசுராமன் (கோடாலி செய்ய தெரிந்த கோப மனிதன்), ராமன்(வில் அம்புகள் கொண்ட, நகர குடியமைப்புகள் கொண்ட மனிதன்), பலராமர் (கலப்பை கொண்டு விவசாயம் செய்பவர்), கிருஷ்ணன் (சூப்பர் மென் கேரக்டர்), இதற்க்கு அப்பால் என்ன என்று தெரியாத கல்கி அவதாரம் என உயிரினங்கள் நீரில் இருந்து ஆரம்பித்து, கல்கி வரை செல்லும் பரிணாம வளர்ச்சி குறிப்பிட படுவதாக சிலர் சொல்கின்றனர். 

இந்த வரிசையில், உயிரினங்கள் நீரில் ஆரம்பித்து தற்போது தரையில் வாழும் நிலை வரை எடுத்துரைக்க பட்டாலும், திமிங்கலம் போன்ற சில உயிரினங்கள் தரையில் வாழ்ந்து பின் மீண்டும் நீருக்குள் சென்ற வரிசைகள் நிரப்பப் படவில்லை.

நல்ல வேளையாக, பகவத் கீதையில் மனிதனை படைத்தது பற்றி எந்த குறிப்பும் இல்லாததால், இந்து சமய மக்களுக்கு பரிணாம கொள்கையினை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. (முதலில் மகாபாரத இதிகாசம் எழுதப்பட்ட போது பகவத் கீதை அதில் இல்லை. பிற்பாடு, தனியாக எழுத பட்டு, அதை மகாபாரத நூலில், போர்க்கள காட்சியில் இடைச்செருகல் பண்ண பட்டது என்றும் ஒரு கருத்து உள்ளது.)

கிறித்தவ மக்களின் புனித நூலான பைபிளில் " கடவுள் முதல் நாள் ஒளியை உண்டாக்கி இருளில் இருந்து பிரித்தார்; இரண்டாம் நாள் வானத்தை படைத்தார்; மூன்றாம் நாள் நிலப்பகுதிகளையும், கடல்களையும், மரம், செடி, கொடிகளையும் படைத்தார்; நான்காம் நாள் சூரியன், நிலா மற்ற நட்சத்திரங்களையும் பூமிக்கு ஒளி தர படைத்தார்;  ஐந்தாம் நாள் நீர்வாழ் உயிரினங்களையும், பறவைகளையும், படைத்தார்; ஆறாம் நாள் மற்ற விலங்குகளோடு மனிதனையும் படைத்து, பின் ஏழாம் நாள் ஓய்வு எடுத்ததாக" தெரிவிக்க பட்டுள்ளது.

நம்மை நேரடியாக கடவுள் படைத்தார் என்று நம்பி கொண்டிருக்கும் போது, குரங்கில் இருந்து தவறி தான் நாம் உருவானோம் என்று சொன்னால், ஏற்படும் கோபம் புரிந்து கொள்ள கூடியதே. 

மதங்கள் கூறிய சில விஷயங்கள், பொய் என நிரூபிக்க பட்டதால் கடவுள் இல்லை என்று அர்த்தம் இல்லை. கடவுள் பற்றி நாம் கொண்டு இருக்கும் கருத்துக்கள், அவருக்கு நாம் சூட்டிய பெயர்கள், வழிபடும் முறைகளில் தான் பொய் உள்ளது. இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை படைத்த பரம்பொருளை யோசிக்க, நமக்கு உள்ள 1300-1400 கிராம் மூளை போதாது என்றே தோன்றுகிறது. மற்ற படி, நாம் எப்படி தோன்றினோம் என்றே நமக்கு தெரியாத போது, படைத்தவன் பற்றிய கதைகள் பரப்புவதையும், கடவுளின் பெயரில் சண்டைகள் போடுவதையும் நிறுத்துவோமாக.

ஆமென்.